"தாய் மொழியில் பதவியேற்க முடியல.." பாஜக எம்பி அதிருப்தி.. வேறு வழியின்றி இந்தியில் பதவி பிரமாணம்
டெல்லி: லோக்சபா தேர்தலுக்குப் பிறகு அவை முதல்முறையாகக் கூடியிருக்கிறது. இதில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் பதவியேற்று வருகிறார்கள். இதற்கிடையே பீகாரைச் சேர்ந்த பாஜக எம்பி ராஜீவ் பிரதாப் என்பவர் தாய் மொழியில் பதவியேற்க முடியவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். அனைத்து எம்பிக்களும் அவரவர் தாய்மொழியில் பதவியேற்று இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நமது நாட்டில் லோக்சபா தேர்தல் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இதில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை அமைத்தது.

இதையடுத்து நாடாளுமன்றம் முதல்முறையாக நேற்றைய தினம் கூடியது. நேற்றைய தினம் லோக்சபாவில் பல கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பதவியேற்றனர்.
தாய் மொழி: அதிலும் குறிப்பாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் தங்கள் தாய் மொழியில் பதவியேற்றனர். இதற்கிடையே பீகாரில் உள்ள சரண் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி ராஜீவ் பிரதாப் ரூடி தாய் மொழியில் பதவிப் பிரமாணம் செய்ய முடியவில்லை என்று வேதனை அடைந்தார். மற்ற எம்பிக்கள் தாய் மொழியில் பதவிப் பிரமாணம் செய்யும் போது இவர் மட்டும் வேதனை தெரிவித்தது ஏன்.. இதன் காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
லோக்சபாவின் முதல் நாளான நேற்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் பல்வேறு மொழிகளிலும் பதவியேற்றனர். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், பெங்காலி, அஸ்ஸாமி மற்றும் ஒடியா என பல்வேறு மொழிகளிலும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
22 மொழிகள்: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் ஆங்கிலம் அல்லது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் பதவியேற்கும் போது உறுதிமொழி எடுக்கலாம். பீகார் பாஜக எம்பியான ராஜீவ் பிரதாப் ரூடியின் தாய்மொழி போஜ்புரி.. இந்த போஜ்புரி மொழி எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்படவில்லை. எனவே, அவரால் தாய் மொழியில் பதவியேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.
தன்னால் தாய்மொழியில் பதவியேற்க முடியாது என்பது தெரிந்ததும் ராஜீவ் பிரதாப் அதிருப்தி அடைந்தார். அனைத்து எம்பிக்களும் தங்கள் தாய் மொழியில் பதவியேற்றால் நன்றாக இருக்கும் என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அதிருப்தி: அவர் மேலும் கூறுகையில், "அவையில் இருக்கும் ஒவ்வொருவரும் அவரவர் மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இதைப் பார்க்க நன்றாக இருக்கிறது.. அதேபோல எங்கள் தாய்மொழியான போஜ்புரியில் பதவிப் பிரமாணம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருந்தால் அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என்று வேதனை தெரிவித்தார். இதையடுத்து அவர் வேறு வழியில்லாமல் இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இந்த ராஜீவ் பிரதாப் தான் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஆர்ஜேடி தலைவரான லாலு பிரசாத்தின் மகள் ரோகிணி ஆச்சார்யாவைத் தோற்கடித்திருந்தார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராஜீவ் பிரதாப் 4.71 லட்சம் வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட ரோகிணி ஆச்சார்யா 4.58 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார். இதன் மூலம் சுமார் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தார்.












Click it and Unblock the Notifications