பாஜக ருத்ர தாண்டவம்: சிவசேனா, என்சிபிக்கு அடுத்து நிதிஷ்குமாரின் ஜேடியூவுக்கு 'சவப்பெட்டி’ ரெடி?!
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் பலம் வாய்ந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சிகளை இரண்டாக உடைத்து சிதறு தேங்காயாக சிதற வைத்த பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அடுத்ததாக பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு குறி வைத்திருப்பதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்திருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, பாஜகவின் கால் நூற்றாண்டு கால கூட்டணி கட்சி. ஆனால் அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் சிவசேனா கை கோர்த்து ஆட்சியை அமைத்தது. இதனால் கொந்தளித்து கிடந்த பாஜக, ஒரு நல்ல நாளில் சிவசேனா கட்சியை உடைத்து சுக்கு நூறாக்கியது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் பாஜகவை ஆதரிக்க சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. சிவசேனாவின் கட்சி பெயர், சின்னம் அத்தனையும் உத்தவ் தாக்கரேவிடம் இருந்தும் பறிபோனது.

சிவசேனாவை ஒழித்து கட்டிய அதே பாணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸின் கதையையும் முடித்துவிட்டது பாஜக. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் 40 எம்.எல்.ஏக்கள், அஜித் பவார் தலைமையில் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அஜித் பவார் துணை முதல்வராகிவிட்டார்; 8 என்சிபி எம்.எல்.ஏக்களும் அமைச்சராகிவிட்டனர், இப்போது என்சிபி எங்களுக்கே சொந்தம் என்கிறது அஜித் பவார் தரப்பு.
பாஜகவின் இந்த திருவிளையாடல்கள் மகாராஷ்டிரா மாநிலத்துடன் ஓயாது என்கிற அச்சம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மையம் கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பகிரங்கமாகவே, பாஜகவின் அடுத்த ருத்ர தாண்டவம் பீகார் மாநிலம்தான் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் மீது ஜேடியூ எம்.எல்.ஏக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஜேடியூ எம்.எல்.ஏக்களும் மூத்த தலைவர்களும் ராகுல் காந்தியை நிதிஷ்குமார் தலைவராக கொண்டாடுவதை ஏற்கவே இல்லை; அதேபோல மாநிலத்தில் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவையும் அவர்கள் ஏற்கவில்லை. இதனால் நிச்சயம் கலகம் வரும் என்கிறார். அதேபோல உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அகிலேஷ் யாதவுடன் மல்லுக்கட்டும் ஆர்.எல்.டி தலைவர் ஜெயந்த் சவுத்ரியும் பாஜக அணிக்கு வருவார் என்றார் அத்வாலே. ஆனால் ஜெயந்த் சவுத்ரி இதனை திட்டவட்ட்மாக மறுத்துள்ளார்.
மகாராஷ்டிராவை தொடர்ந்து பாஜக தமது ஜேடியூவை இலக்கு வைக்கும் என்பதை நிதிஷ்குமார் நன்கு உணர்ந்தே செயல்படுகிறார் என்கிறார் பாஜக ராஜ்யசபா எம்பி சுஷில் மோடி. இது தொடர்பாக சுஷில் மோடி கூறுகையில், 13 ஆண்டுகளாக எம்.எல்.ஏக்களை தனியே சந்தித்து நிதிஷ்குமார் பேசியதே இல்லை. இப்போதுதான் எம்.எல்.ஏக்களை தக்க வைக்க ஆலோசனை நடத்தி வருகிறார் என்றார். ஜேடியூவிலும் விரைவில் கலகம் வரும் என்பதை பகிரங்கமாக சுஷில் மோடியும் ட்விட்டர் பதிவுகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.
பீகார் சட்டசபையில் நிதிஷ்குமாரின் ஜேடியூவுக்கு 45 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஜேடியூவை சிதைக்க 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என கணக்குப் போடுகிறதாம் பாஜக. ஆனால் இந்த நிமிடம் வரை ஜேடியூவி கலகக் குரல் எழுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதையும் பாஜக மேலிடம் உணர்ந்தே இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
ஒருவேளை ஜேடியூ ஆபரேஷன் தோல்வி அடைந்தால், காங்கிரஸ் பக்கம் கவனத்தை பாஜக திருப்பலாம்; ஏனெனில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பலரும் எப்போது பாஜகவுக்கு தாவலாம் என காத்திருக்கின்றனர் என சொல்கிறது பாஜக வட்டாரங்கள். இதனால் அடுத்த அரசியல் குழப்பம் நிச்சயம் பீகாரில்தான் என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications