ம.பி. சபாநாயகர் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.. பாஜக மனு
டெல்லி: மத்திய பிரதேச சட்டசபை வரும் 26ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டள்ளது. ஆளுநர் லால்ஜி உரைக்கு பின்னர் சட்டசபையை சபாநாயகர் ஒத்திவைத்தார். கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக சபையை ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார் ,ஆனால் அதேநேரம் எதிர்க்கட்சியான பாஜக, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 22 பேருடன் கமல்நாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அதன்பிறகு 6 அமைச்சர்கள் உள்பட 22 பேரும் சபாநாயகருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கமல்நாத் 6 அமைச்சர்களையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், பாஜக பிடியில் உள்ள எம்எல்ஏக்களை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்றும் அறிவித்தார். இதையடுத்து முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். வாக்குகள் அடிப்படையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி வீடியோ எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தாமதிக்கவோ நிறுத்திவைக்கவோ கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மத்திய பிரதேச சட்டசபை இன்று காலை கூடிய நிலையில் ஆளுநர் லால்ஜி உரையாற்றினார். இதையடுத்து கொரோனா வைரஸ் பிரச்சனையை கூறி சட்டசபையை சபாநாயகர் என்பி பிரஜபதி வரும் 26ம் தேதி வரை ஒத்திவைத்தார். இதனால் இன்னும் 10 நாட்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு சபாநாயகர் என்பி பிரஜபதிக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது.மத்தியப் பிரதேச சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுமாறு பாஜக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் கமல்நாத்தை இன்று தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோரிய ஆளுநரின் உத்தரவை காங்கிரஸ் அரசாங்கம் "வேண்டுமென்றே" மீறுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது, மேலும் ஒரு நாள் கூட ஆட்சியில் இருக்க காங்கிரஸ்க்கு உரிமை இல்லை என்றும் காங்கிரஸ் குதிரை பேரத்தில் ஈடுபட முயற்சிக்கிறது என்றும் பாஜக குற்றம்சாட்டி உள்ளது.ஆளுநர் லால்ஜி டாண்டனை, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் சந்தித்த பாஜக எம்எல்ஏக்கள் 106 பேர் இதில் ஆளுநர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications