இதுவரை 4 தலைகள்.. கண் திரும்பியதால் கடுப்பான மேலிடம்.. தலைநகரில் ‘தாமரை’ ஆபரேஷன்.. பாஜக ஆடும் கேம்!
டெல்லி : ஆம் ஆத்மியை குறிவைத்துள்ள பாஜக மேலிடம், அவர்கள் ஆளும் டெல்லி, பஞ்சாப்பில் 'ஆபரேஷன் தாமரை'யை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆம் ஆத்மியில் இருந்து 4வது புள்ளி ரெய்டு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி, விரைவில் தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநில தேர்தலிலும் கவனம் செலுத்தி வருகிறது.
ஆம் ஆத்மி தங்கள் கோட்டைக்குள் இறங்க நேரம் பார்த்து வரும் நிலையில், ஆம் ஆத்மி ஆளும், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அக்கட்சி எம்.எல்.ஏக்களை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பாஜக.
அதில் வெற்றி கிடைக்காத நிலையில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மீது தொடர்ச்சியாக ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்து அக்கட்சியைச் சேர்ந்த 4 பேர் ரெய்டுகளால் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

பாஜகவின் திட்டம்
டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட ஆம் ஆத்மி கட்சியின் பல்வேறு எம்.எல்.ஏக்களை பாஜக தலா 20 கோடி ரூபாய்க்கு விலை பேச முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டை ஆம் ஆத்மி முன்வைத்தது. அதேபோல, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் 10 எம்.எல்.ஏக்களை பாஜக விலைபேசி வருவதாகவும், அதன் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வர முயல்வதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

தீவிர ஆக்ஷன் ஏன்?
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி, விரைவில் தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டு தேர்தல் வியூகங்கள் குறித்தும், பிரச்சாரங்கள் குறித்தும் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இதனை சற்றும் விரும்பாத பாஜக, தனது அதிரடி ஆக்ஷனை தீவிரப்படுத்தியுள்ளது.

அமானதுல்லா கான்
டெல்லியின் ஆக்லா தொகுதி எம்.எல்.ஏவான ஆம் ஆத்மியை சேர்ந்த அமனத்துல்லா கான், வக்பு வாரியத்தின் தலைவராகவும் உள்ளார். டெல்லி வக்பு வாரியத்தில் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2020ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், அமானதுல்லா கானின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் போலீசார் நேற்று ரெய்டு நடத்தினர். இதையடுத்து, அமானதுல்லா கான் கைது செய்யப்பட்டார்.

அடுத்தடுத்து 4 பேர்
சிபிஐ, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என ஆம் ஆத்மியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளான சத்யேந்திர ஜெயின், மனிஷ் சிசோடியா, கைலாஷ் கெலாட் ஆகியோரை அடுத்து அமானதுல்லா கான் மீது ரெய்டு நடத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் அரசைக் கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் பேரம் பேசி வந்த நிலையில், அந்த முயற்சி பலிக்காததால், ரெய்டுகள் மூலம் பணிய வைக்கும் முயற்சிகளை தொடங்கியுள்ளது பாஜக என விமர்சிக்கிறார்கள் ஆம் ஆத்மி கட்சியினர்.

அடுத்த பூகம்பம்
குஜராத் தேர்தலை குறிவைத்து ஆம் ஆத்மி செயல்பட்டு வருவதை தடுத்து, அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே, டெல்லி, பஞ்சாப்பில் தொடர்ச்சியான முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது எனக் கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்த ரெய்டு ஆக்ஷன் இதோடு முடிந்துவிடாது, ஆம் ஆத்மி ஆளும் இரு மாநிலங்களிலும் இன்னும் பலர் தொடர்பான குற்றச்சாட்டுகளை பாஜக தூசு தட்டி வருகிறது, அடுத்தடுத்து பூகம்பங்கள் கிளம்பும் என்கிறார்கள்.

ஆபரேஷன் தாமரை
பெரும்பாலான மாநிலங்களைப் பிடித்துவிட்ட நிலையில் தலைநகரில் ஆட்சியை அமைத்து விட வேண்டும் என்பது பாஜகவின் நீண்டகால குறி. அதனை நிறைவேற்ற 'ஆபரேஷன் லோட்டஸ்' முயற்சியை வெகுநாட்களாக மேற்கொண்டு வருகிறது பாஜக. அதன் எதிரொலியாகவே சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் எம்.எல்.ஏக்கள் ஆதரவை சட்டமன்றத்தில் நிரூபிக்கும் நிலை வந்தது. இந்நிலையில்தான் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியை வழக்குகள் மூலம் உடைக்கும் கேமை கையில் எடுத்துள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications