வெளிநாட்டில் இருந்து கொண்டு.. ராகுல் காந்தி இந்தியாவுக்கு துரோகம் செய்கிறார்! பாயும் பாஜக! என்னாச்சு
டெல்லி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வெறுப்பு பிரசாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி பேசி இருந்த நிலையில், ராகுல் காந்தி அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஐடியாஸ் ஃபார் இந்தியா என்ற மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இன்று பேசிய ராகுல் காந்தி, வெறுப்புவாத பிரசாரம், பாஜக, சீன விவகாரம் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி பேசுகையில், "இந்தியா இப்போது நல்ல இடத்தில் இல்லை. பாஜகவின் விஷ பிரசாரம் நாட்டை பாதித்துள்ளது. வகுப்புவாத பிரசாரம் மூலம் நாடு முழுவதும் பாஜக மண்ணெண்ணெய் ஊற்றிவிட்டது. நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் அதிகரித்து வரும் போதிலும், வெறுப்புவாத அரசியல் மற்றும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாலேயே பாஜக இந்தியாவில் தொடர்ந்து ஆட்சியில் உள்ளது" என்று அவர் பேசியிருந்தார்.

பாஜக அட்டாக்
இந்நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வெறுப்புவாத பேச்சின் மூலம் ராகுல் காந்தி இந்தியாவுக்குத் தீங்கு விளைவிப்பதாக பாஜக சாடியுள்ளது. மேலும், வெளிநாட்டு மண்ணில் இருந்து கொண்டு இந்தியாவை ராகுல் காந்தி அடிக்கடி விமர்சித்து வருவதாகவும் பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது.

நிறுத்திக் கொள்ள வேண்டும்
இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வெறுப்பு பேச்சைத் தான் ராகுல் பேசி உள்ளார். அவரது பேச்சில் இந்தியாவுக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியா குறித்து தவறாகப் பேசுவதைக் காங்கிரஸ் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பெரிய தவறு
இதன் மூலம் அவர் நாட்டை காட்டிக் கொடுத்து அவமானப்படுத்தும் வேலை தான் செய்து வருகிறார் என்றே சொல்லலாம். ராகுல் காந்தி திரும்பத் திரும்ப தவறுகளை மட்டுமே செய்து வருகிறார். அவர் எப்போதும் கடந்த முறை செய்ததை விடப் பெரிய தவற்றைத் தான் செய்கிறார். பிரதமர் மோடியின் கீழ் வலிமையான இந்தியா உருவாகி வருகிறது. சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உலக நாடுகளுக்கு இந்தியா தான் வழிகாட்டுகிறது. இதற்கு ஒரு உதாரணமாக இந்தியாவின் கொரோனா வேக்சின் ஏற்றுமதியை சொல்லலாம்.

பாகிஸ்தான் உடன் ஒப்பீடு
ராகுல் தனது பேச்சில் இந்தியா ராணுவத்தைப் பாகிஸ்தான் உடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். தப்பிப் பிழைக்கவே போராடி வரும் பாகிஸ்தான் உடன் இந்தியாவை ராகுல் காந்தி ஒப்பிடக்கூடாது . இந்தியா எப்போதுமே தலைசிறந்த ஒரு நாடாகவே இருந்தது. இனியும் இருக்கும், ராகுல் காந்திக்கு மோடியைப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் இந்தியாவுக்கு எதிராகப் பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்.

தியாகம்
அதேபோல லடாக்கின் நிலைமையை ரஷ்யா-உக்ரைன் போருடன் ராகுல் காந்தி ஒப்பிட்டுப் பேசி உள்ளார்., இப்படி ஒப்பிட்டுப் பேசியதன் மூலம் கல்வானில் இந்திய வீரர்களின் தியாகத்தை ராகுல் காந்தி அவமதித்துள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும் ஒரே காரணத்தால் வெறுப்பைப் பரப்பி இந்தியாவை சேதப்படுத்தாலம் என்று அர்த்தம் இல்லை" என்று கடுமையாகச் சாடினார்.

ராகுல் பேச்சு
கேம்பிரிஜில் உக்ரைன் போரையும் சீனாவையும் ஒப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தி, "நேட்டோ மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து இருப்பதால், உங்கள் மீது தாக்குதல் நடத்தப் போகிறோம் என்று ரஷ்யாவின் புதின் கூறுகிறார். இதைக் காஷ்மீர் உடன் இணைத்துப் பார்க்க வேண்டும். உங்கள் (இந்தியாவின்) பிராந்தியத்தை நாங்கள் ஏற்கவில்லை என்று சீனா கூறுகிறது. எல்லையில் ஒரு பிரச்சனை இருக்கிறது" என்றார்












Click it and Unblock the Notifications