இளம் வயதில் தேசிய தலைவர் பொறுப்பு.. நிதின் நபினுக்கு பாஜக மேலிடம் டிக் அடித்தது ஏன்? பின்னணி
டெல்லி: பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நிதின் நபினுக்கு சவாலான பணிகள் முன்னே நிற்கின்றன. 45 வயதே ஆன நிதின் நபீனை இவ்வளவு பெரிய பொறுப்புக்கு பாஜக மேலிடம் தேர்வு செய்தது ஏன்? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். 45 வயதாகும் இவர், ஜேபி நட்டாவிற்குப் பதிலாக இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். பாஜக கட்சி வரலாற்றில் இப்பதவியை வகிக்கும் மிக இளைய பாஜக தலைவர் இவர்தான் ஆவார்.

கிழக்கு இந்தியாவில் இருந்து முதல் நபர்
பீகார் மற்றும் கிழக்கு இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் நிதின் நபின்தான். 2023 ஆம் ஆண்டே ஜேபி நட்டாவின் பதவிக்கலம் முடிந்தாலும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அவரது பதவி நீட்டிக்கப்பட்டது. மீண்டும் பாஜக ஆட்சி அமைத்த நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.
5 முறை சட்டமன்ற உறுப்பினர்
இதையடுத்துதான் நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் ஆட்சிமன்றக்குழுவில் ஒருமனதாக அவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
ஐந்து முறை பாங்கிப்பூர் சட்டமன்ற உறுப்பினரான நிதின் நபின், தற்போது பீகார் சாலை கட்டுமானத் துறை அமைச்சராக இருக்கிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலான அமைப்பு மற்றும் நிர்வாக அனுபவம் கொண்டவர். மறைந்த பாஜக தலைவரும், ஜன சங் சட்டமன்ற உறுப்பினருமான நபின் கிஷோர் சின்ஹாவின் மகனான இவர், ஏ.பி.வி.பி. மூலம் மாணவர் அரசியலுக்கு வந்து, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவில் படிப்படியாக உயர்ந்தார்.
கடின உழைப்பாளி
பாஜகவுக்குள், நிதின் நபின் கடின உழைப்பாளி, எளிதில் அணுகக்கூடியவர் மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பாளர் எனப் பரவலாக அறியப்படுகிறார். அரசியல் நடுநிலை கொண்ட கயஸ்தா உயர் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது, சமூக மோதலை தவிர்க்க உதவும் எனப் பலரும் கருதுகின்றனர்.
கள அளவிலான தேர்தல் பணிகளில் அவருக்கு இருக்கும் திறமை, கடினமான அரசியல் பணிகளைக் கையாள்வதில் வல்லவர் ஆகியவற்றின் அடிப்படியில் பாஜக மேலிடம் இவரை டிக் அடித்ததாக சொல்லப்படுகிறது. அதுபோக, சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலின்போது இணைப் பொறுப்பாளராக பணியாற்றிய நபினின் அமைப்புத் திறன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்தை ஈர்த்தது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ஒப்புதல்
பெரும்பாலான கருத்துக் கணிப்புகளை மீறி பாஜக பெற்ற தீர்க்கமான வெற்றி, கட்சிக்குள் நபினின் மதிப்பைப் பெருமளவில் உயர்த்தியது. இதன் தொடர்ச்சியாக, டெல்லி பிரச்சாரத்திலும் நபின் முக்கியப் பங்காற்றினார். டெல்லியில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க இவரது பங்கு முக்கியமானதாக இருந்தது.
என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்தல் போன்ற அவரது அமைப்புப் பணிகள் நபினுக்கு மேலிடத்தில் கொடுத்தன. பீகார் தேர்தல் முடிந்த கையோடு நடைபெற்ற ஆலோசனையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் நிதின் நபின் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன் இருக்கும் சவால்கள்
பாஜகவின் தேசிய செயல் தலைவர் என்ற பெரிய பொறுப்புக்கு வந்துள்ள நிதின் நபின் முன்னே இருக்கும் சவால்கள் கடுமையானவை. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
பொறுப்பில் அமர்ந்து செயல்பட அவருக்கு மிகக் குறைந்த காலமே உள்ளது. எனினும் சர்ச்சைக்குள் சிக்குபவர் அல்ல.. செயல்பாட்டில் கவனம் செலுத்துபவர்.. மூத்தவர்களுடன் இணக்கமாகப் பணியாற்றுபவர் என்பதால் நம்பகமான தேர்வாகக் கட்சி அவரைப் பார்க்கிறது.












Click it and Unblock the Notifications