ராஜஸ்தான்: வசுந்தர ராஜேவை கை கழுவும் பாஜக..சாமியார் பாபா பாலக்நாத் முதல்வர்? அமித்ஷாவுடன் சந்திப்பு
டெல்லி: ராஜஸ்தான் மாநில புதிய முதல்வராக சாமியார் பாபா பாலக்நாத்தை பாஜக அறிவிக்கக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சாமியார் பாபா பாலக்நாத் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து இந்த தகவல் பகிரப்பட்டு வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு நவம்பர் 25-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு தேவை 101 இடங்கள். சட்டசபை தேர்தலில் பாஜக 115 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியால் 69 இடங்களில்தான் வெல்ல முடிந்தது.

பாஜக ஆட்சியை கைப்பற்றினாலும் ராஜஸ்தான் முதல்வர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா 60க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கு இருப்பதால் தம்மையே முதல்வராக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளார். சில எம்.எல்.ஏக்களை ஹோட்டலில் சிறை வைத்தும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் வசுந்தர ராஜே சிந்தியா. தற்போது வசுந்தர ராஜே சிந்தியா டெல்லியில் முகாமிட்டிருந்தாலும் பாஜக தலைவர்களை அவர் சந்திக்கவில்லை.
இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருக்கும் சாமியார் பாபா பாலக்நாத் இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து பாபா பாலக்நாத், ராஜஸ்தான் புதிய முதல்வராக எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்கிற தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications