அமித்ஷாவை சந்தித்தார் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜெகதீப் தன்கர்.. மாறி மாறி இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி!
டெல்லி : பாஜக சார்பில் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று டெல்லியில் சந்தித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. ஆளும் பாஜக சார்பில் திரௌவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து துணை குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜக வேட்பாளர்
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் நட்டா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்கு பின் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 5-ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 19-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்பு மனுக்கள் பரிசீலனை 20-ஆம் தேதி நடக்கிறது. அதற்குள் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரும் அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது. பாஜக வேட்பாளர் ஜெகதீப் தங்கர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

அமித்ஷாவுடன் சந்திப்பு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார் ஜெகதீப் தன்கர். அப்போது ஒருவருக்கொருவர் மாறி மாறி இனிப்புகளை ஊட்டிவிட்டுக்கொண்டனர்.

அமித்ஷா வாழ்த்து
தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரும், மேற்கு வங்க ஆளுநருமான ஜெகதீப் தன்கருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜெகதீப் தன்கரின் வாழ்க்கை மக்கள் நலனுக்காகவும், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது. அடிப்படைப் பிரச்சனைகள் குறித்த அவரது புரிதலும் அரசியலமைப்பு அறிவும் நாட்டிற்கு பெரும் நன்மை பயக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications