தொட்டில் அமைத்து அந்தரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
டெல்லி: ரயில்களில் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரயில் ஒன்றில் பயணி ஒருவர் தொட்டில் அமைத்து அந்தரத்தில் படுத்துத் தூங்கியபடி பயணித்த சம்பவம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
நமது நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் விரும்பி பயணிப்பது ரயில்களில் தான். டிக்கெட் விலை குறைவு, எல்லா முக்கிய நகரங்களுக்கும் எளிதாகச் செல்ல முடியும் உட்பட பல காரணங்களால் மக்கள் ரயில் பயணங்களையே தேர்வு செய்கிறார்கள்.

ஆனால், சமீப காலங்களாக ரயில் பயணம் என்றால் பலருக்கும் மனதில் திக்திக் என்ற உணர்வு வந்துவிடுகிறது. ஓவர் கூட்டத்தால் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் டெல்லி டூ அசாம் வரை இயங்கும் பிரம்மபுத்திரா மெயில் ரயிலில் நடந்துள்ளது.
தொட்டில் அமைத்து: கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி பிரம்மபுத்திரா மெயில் ரயிலில் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. ஜெனரல் கோச்சில் கால் வைக்கக் கூட இடம் இல்லாத வகையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த களேபரங்களில் இருந்து தப்பிக்க ஒருவர் தன்னிடம் இருந்த பெட்ஷீட்டை வைத்து தொட்டில் அமைத்துப் படுத்துக் கொண்டார். இது தொடர்பான போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ரயிலில் நடக்கும் பாதை, கதவுக்கு அருகே.. அவ்வளவு ஏன் டாய்லெட்டில் கூட பயணிகள் கூட்டமாக அமர்ந்து பயணிக்கும் சூழல் காணப்பட்டது. இந்தளவுக்குக் கூட்டம் அதிகமாக இருந்ததாலோ என்னவோ அந்த நபர் தொட்டில் அமைத்துப் படுத்தே விட்டார்.
புலம்பும் பயணிகள்: இது குறித்து அந்த ரயிலில் பயணித்த பயணிகள் கூறுகையில், "ரயிலில் இடமே இல்லை. இதனால் ரயிலில் பயணித்த பெண்களும், குழந்தைகளும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். ஸ்லீப்பர் கோச்கள் ஜெனரல் கோச்களை போல இருக்கிறது. எல்லாரும் அதில் தான் இருக்கிறார்கள். ஏசி பெட்டிகளையும் விட விட்டுவைக்கவில்லை. அதிலும் ஸ்லீப்பர் பெட்டிகளைப் போலக் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது" என்றார்.
இந்த ரயில் மட்டுமில்லை பெரும்பாலான ரயில்களின் நிலை இப்போது இப்படி தான் இருக்கிறது. இதனால் ரயில்வே நிர்வாகம் உடனடியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது. இது குறித்து தீன் தயாள் உபாத்யாய் கோட்ட ரயில்வே மேலாளர் ராஜேஷ் குப்தா கூறுகையில், "இந்திய ரயில்வே தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது. விரைவில் சிறப்பு ரயில்களையும் இயக்க உள்ளோம்.
சிறப்பு ரயில்கள்: கோடைக் காலத்தில் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோடை விடுமுறையில் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புகிறார்கள். இது கல்யாண சீசன் என்பதும் ஒரு காரணம். இவை மட்டுமின்றி இது அறுவடை காலம் என்பதால் மக்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு அதிகளவில் செல்கிறார்கள். இதன் காரணமாகவே கூட்டம் அதிகரித்துள்ளது.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கூட்டத்தைச் சமாளிக்கச் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறோம். கடந்த ஆண்டு, 6369 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்தாண்டு 9111 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கிறோம். தேவைப்பட்டால் கூடுதல் ரயில்களையும் இயக்க தயாராக உள்ளோம்" என்றார்.
விளக்கம்: கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், வெயில் காரணமாகப் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்ய ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ராஜேஷ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications