எம்பிக்கள் சஸ்பெண்ட்.. நாடாளுமன்றத்தில் மழை, கொசுக்கடியில் போராடும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்!
டெல்லி: நாடாளுமன்ற அவையில் அமளியில் ஈடுபட்டதாக 27 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் மழை, கொசுக்கடிக்கு மத்தியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், முதல் நாள் சபை கூடியதில் இந்து எதிர்க்கட்சியினர் விலைவாசி உயர்வை கையில் எடுத்து கோஷத்தில் ஈடுபட்டனர்.
இதில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ராஜ்ய சபாவில் அவை தலைவரின் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட 19 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து அவைத்தலைவர் நடவடிக்கை மேற்கொண்டார்.

எதிர்க்கட்சிகள் கோஷம்
தொடர்ந்து நேற்று ராஜ்ய சபா கூடியதும், விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, குஜராத் கள்ளச்சாராய சாவு ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதில், ஆம் ஆத்மி உறுப்பினர்கள் சுஷில்குமார் குப்தா, சந்தீப்குமார் பதக், சுயேச்சை உறுப்பினர் அஜித்குமார் புயன் ஆகியோர் சபை நடவடிக்கையை மீறியதாக கூறி சபையின் துணைத்தலைவரான ஹரிவன்ஷ் ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

27 எம்.பி.க்கள் இடைநீக்கம்
இதன்மூலம் கூட்டத்தொடர் தொடங்கிய சில நாட்கலிலேயே ராஜ்யசபாவில் மட்டும் 23 எம்.பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லோக்சபா, ராஜ்யசபா என இரண்டு அவைகளையும் சேர்த்த்து கணக்கிட்டால் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கையானது 27 ஆக உள்ளது. இதற்கிடையே, ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள், தங்கள் இடைநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் 50 மணி நேர தர்ணா போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. சந்தோஷ் குமார், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்பட 5 எம்.பி.க்கள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொசு வலைக்குள் அமர்ந்து போராட்டம்
இந்நிலையில், காந்தி சிலை அருகே முகாமிட்டு தர்ணா போராட்டம் நடத்திய எம்.பி.க்கள், நேற்று தங்கள் போராட்ட களத்தை நாடாளுமன்ற வாசலுக்கு மாற்றினர். மழை பெய்ததாலும், கூடாரம் போட அனுமதி இல்லாததாலும் இந்த முடிவை எடுத்ததாக ஒரு தலைவர் தெரிவித்தார். மழை, கொசுக்கடி என அனைத்தையும் சமாளித்த எம்.பிக்கள் தொடர்ந்து காந்தி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொசுவை சமாளிக்க கொசு பேட்டையும் கையில் வைத்திருந்ததை காண முடிந்தது. சில எம்.பிக்கள் கொசு வலை அமைத்து அதற்குள் அமர்ந்து இருந்தனர். மக்களுக்கு எதிரான விலைவாசி அதிகரிப்பை நிறுத்துங்கள் என்ற வார்த்தைகள் அடங்கிய பதாகைகள் இடம் பெற்றிருந்தன.

50 மணி நேர தர்ணா போராட்டம்
பிரதமர் மோடி முதல் முறையாக அதாவது 2014- ஆம் ஆண்டு நாடாளுமன்றம் வந்த போது அவர் அளித்த வாக்குறுதியை நினைவு படுத்தும் வகையில் நாடாளுமன்ற நுழைவுப் பகுதியை தங்கள் போராட்ட களமாக தேர்வு செய்துள்ளதாக எம்.பிக்கள் தெரிவித்தனர். திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள், டோலா சென் மற்றும் சந்தனு சென் நள்ளிரவுக்கு பிறகு அங்கேயே இருந்தனர். அதிகாரிகள் டென்ட் அமைக்க அனுமதி கொடுக்காததால் வெட்ட வெளியில் படுத்து உறங்கினர். கனமழை காரணமாக 50 மணி நேர தர்ணா போராட்டம், காந்தி சிலை பகுதியில் இருந்து நாடாளுமன்ற பிரதான நுழைவு பகுதிக்கு மாற்றப்பட்டதாகவும் 27 எம் பிக்களின் இடை நீக்கம், விலை வாசி உயர்வு, ஜி.எஸ்.டி குறித்து விவாதம் நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.பிக்கள் தர்ணாவில் ஈடுபட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி டெரிக் ஓ பிரைன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

போராட்டமா? சுற்றுலாவா?
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.பிக்களுக்கு நேற்று மதிய உணவாக இட்லியை திமுக எம்.பிக்கள் வழங்கினர். திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் பிஷ் பிரை கொடுத்து உபசரித்தனர். இரவு உணவு டி.ஆர்.எஸ் எம்.பிக்கள் வழங்கியதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன. நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், நீராகரங்கள் அதிகம் வழங்குமாறு ஆம் ஆத்மி எம்.பிக்கள் கேட்டுகொண்டனர். செவ்வாய்க்கிழமை இரவு உணவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தந்தூரி சிக்கன் வழங்கியதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூன்வாலா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காந்தி சிலை முன்பாக அசைவ உணவு சாப்பிடக்கூடாது எனவும் மிருகவதைக்கு எதிரான கொள்கையை காந்தி கொண்டிருந்தார் எனவும் கூறிய பூன்வாலா, இது போராட்டமா? அல்லது சுற்றுலாவா என பலரும் கேட்பதாக கடுமையாக சாடியிருந்தார்.
Recommended Video

பாஜக பயப்படுகிறது
இதற்கு பதிலடி கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பார்த்து பாஜக அச்சப்படுகிறது. கதவை மூடிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் தொண்டர்களும் அனைத்தையும் சாப்பிடுகின்றனர். எனவே, எங்களின் உணவு குறித்து நீங்கள் கருத்து கூற வேண்டாம். எதிர்க்கட்சி எம்.பிக்கள் உணவு கொண்டு வந்து கொடுப்பதால், எங்களின் ஒற்றுமையக் கண்டு பாஜக பயப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications