ஆக்சிஜனுக்காக தவிக்கும் இந்தியா.. உருகிய பிரெட் லீ.. 1 பிட்காயின் நன்கொடை தருவதாக அறிவிப்பு
டெல்லி: இந்தியா எனது 2வது தாயகம். கொரோனாவுக்கு எதிரான போரில் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்காக 1 பிட்காயின் நிதியை நன்கொடையாக அளிக்கிறேன் என்று முன்னாள் ஆஸ்திரேலியா வேகப் பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார்.
ஒரு பிட்காயின் என்பது இந்திய மதிப்பில் 40 லட்சத்து 95 ஆயிரத்து 991 ரூபாய் ஆகும். ஏற்கனவே ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ் இந்தியாவுக்கு 50,000 டாலர் நிதியுதவி அளித்துள்ள நிலையில் தற்போது பிரெட் லீயும் நன்கொடை அளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரையொட்டி தற்போது இந்தியாவில் முகாமிட்டுள்ளார் பிரெட் லீ. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியா எப்போதுமே எனக்கு 2வது தாயகமாகும். இந்திய மக்களிடமிருந்து எனக்கு தொழில்முறை ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எப்போதுமே அன்பும், ஆதரவும் அபரிமிதமாகவே கிடைத்துள்ளது. எனது ஓய்வுக்குப் பிறகும் கூட இந்திய மக்களின் இதயத்தில் எனக்கு தனி இடம் உள்ளது. இந்திய மக்கள் தற்போதைய கொரோனா போராட்டத்தில் சிக்கித் தவிப்பது என்னை வருத்தமுற வைத்துள்ளது.

இப்போது அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக இந்தப் போரில் வெல்ல வேண்டும். தேவைப்படுவோருக்கு உதவி செய்ய வேண்டும். பாட் கமின்ஸ் அதைத் தொடங்கி வைத்துள்ளார். அவரைப் பாராட்டுகிறேன். எனது பங்களிப்பாக 1 பிட் காயின் நிதியை அளிக்கிறேன் என்று கூறியுள்ளார் பிரெட் லீ. இந்தப் பணத்தைக் கொண்டு இந்திய மக்களுக்குத் தேவையான ஆக்சிஜனை வாங்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications