இனிதான் சிக்கல்.. நாளையே அமித்ஷாவை பார்க்க டெல்லி விரைகிறார் எடியூரப்பா
Recommended Video
டெல்லி: அதிருப்தி எம்எல்ஏக்களின், தயவால், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சியை கலைத்தாகி விட்டது. இப்போது தனது தலைமையில் பாஜக அரசை அமைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றாகிவிட்டது. ஆனால், இனிதான் எடியூரப்பாவுக்கு உண்மையான சவால் ஆரம்பிக்கிறது.
2008ஆம் ஆண்டு, முதல் முறையாக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்தது பாஜக. ஆனால் அப்போதும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை.
சுயேச்சை எம்எல்ஏக்கள் சிலரும் ஆதரவுடன்தான், பாஜக ஆட்சி அமைக்க முடிந்தது. இப்போதும், முழு பெரும்பான்மை இல்லாமல்தான் எடியூரப்பா அரசு அமைந்துள்ளது.

சிக்கலான எண்ணிக்கை
இவ்வாறு பெரும்பான்மை எண்ணுக்கு குறைவாகவோ, அல்லது கொஞ்சம் அதிகமாகவோ இருந்தால் சிக்கல்தான். எப்படி கிரிக்கெட்டில் 240 முதல் 260 ரன்கள் எடுப்பது என்பது ட்ரிக்கி ஸ்கோர் என்று சொல்வார்களே, அது போல தான் அரசியலிலும் மேஜிக் நம்பருக்கு, சற்று குறைவாகவோ அல்லது, கொஞ்சம் கூடுதலாகவோ எடுத்தால் சிக்கல்தான்.

ஆதரவு வாபஸ்
ஏனெனில் அமைச்சரவையில் இடம் கிடைக்காத எம்எல்ஏக்கள் கோஷ்டிகளை அமைத்துக் கொண்டு, ஆட்சிக்கு எதிராக கலகம் செய்யும் வாய்ப்பு, இதுபோன்ற நேரங்களில் அதிகம். 2008 ஆம் ஆண்டு எடியூரப்பா அமைச்சரவையிலும் இப்படித்தான் நடந்தது. ரெட்டி சகோதரர்கள் தலைமையில் பாஜகவின் குறிப்பிட்ட அளவுக்கான எம்எல்ஏக்கள் தனியாக செயல்பட ஆரம்பித்து, அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது இதன் காரணமாகத்தான்.

அமித்ஷாவே கதி
எனவேதான், எடியூரப்பா 5 ஆண்டுகாலம் முதல்வராக பதவி வகிக்க முடியவில்லை. இப்போது நிலைமை அதைவிட மோசம். காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் எம்எல்ஏ பதவிகளை இழந்துவிட்டனர். இப்போது அவர்களுக்கு எடியூரப்பா அரசு ஏதாவது ஒரு பதவிகளை வழங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. மற்றொரு பக்கம் நீண்டகாலமாக அதிகாரத்தில் இல்லாத, பாஜகவில் உள்ள பலரும், அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். இவர்கள் ஆசைகளையெல்லாம் ஈடேற்றுவது என்பது எடியூரப்பாவுக்கு மிகவும் சிரமமான காரியம். எனவே அமித்ஷாவே கதி என்ற நிலைக்கு வந்துவிட்டார் எடியூரப்பா.

அமைச்சரவை
நாளை மதியம், விமானம் மூலம் டெல்லி செல்லும் எடியூரப்பா, அமித்ஷாவுடன் அமைச்சரவை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். அவர் இறுதி செய்யும் பட்டியலின் அடிப்படையில், அமைச்சரவையை அமைத்து, பொறுப்பை அமித்ஷாவிடம் தள்ளிவிடும் முடிவில் இருக்கிறார் எடியூரப்பா. ஆனால் இதையெல்லாம் அமைச்சர் பதவி ஆசையிலுள்ளவர்கள், ஏற்பார்களா? இல்லை என்றால் அதிருப்தி ஏற்படுமா என்பது போன்றவைதான், எடியூரப்பாவின் அடுத்தடுத்த அரசியல் நாட்களை, முடிவு செய்யப்போகும் அம்சங்கள். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் குமாரசாமி இருவருமே, திரும்ப, திரும்ப சொல்வது ஒன்றே ஒன்றுதான். பெரும்பான்மை இல்லாத இந்த எடியூரப்பா அரசு, நீண்ட காலம் நீடிக்காது என்பது தான் அது.












Click it and Unblock the Notifications