டெல்லியில் எரிக்கப்பட்ட பாதுகாப்பு படை வீரர் முகமது அனீஸ் வீடு.. பிஎஸ்எப் தரப்போகிறது கல்யாண பரிசு
டெல்லி: வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் எரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வீடுகளில் எல்லை பாதுகாப்பு படை வீரர், முகமது அனீஸின் (29) வீடும் ஒன்று.
பாகிஸ்தானுக்கே ஓடிப்போய்விடு என்ற கோஷத்தோடு, அவரது வீடும் இடிக்கப்படும் என்று, யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படித்தான் சொல்லி இடித்து தள்ளப்பட்டது அவர் வீடு.

எல்லை பாதுகாப்பு படை வீரராக இருந்தாலும் முஸ்லீம் என்பதால், இப்படி ஒரு இழப்பையும், தாக்குதலையும் சந்தித்தது முகமது அனீஸ் குடும்பம் என்று கூறப்படுகிறது. நாடு முழுக்க இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முகமது அனீசின் பெற்றோர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை இன்று சந்தித்தார், பி.எஸ்.எஃப் டி.ஐ.ஜி புஷ்பேந்திர ரத்தோர்.
இடிக்கப்பட்ட வீட்டை புனரமைத்து 'திருமண பரிசாக' அனீஸிடம் ஒப்படைப்போம் என்று அவர் உறுதியளித்தார். பிப்ரவரி 25ம் தேதிதான், யாரும் எதிர்பார்க்காத அந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.
"இதர் ஆ பாகிஸ்தான், துஜே நாகரிக்தா டிடே ஹை (இங்கு வாருங்கள் பாகிஸ்தானி, நாங்கள் உங்களுக்கு குடியுரிமை தருவோம்)" என்று வன்முறை குண்டர்கள் அனீஸின் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த கார்களை தீ வைத்துக் கொண்டே கூச்சலிட்டதை இன்னும் மறக்க முடியவில்லை என்கிறார்கள் அவரது குடும்பத்தார்.
இதன்பிறகு அந்த கும்பல் காஸ் சிலிண்டரை எறிந்து வீட்டிற்கு தீ வைத்துள்ளது. அனீஸைத் தவிர, அவரது தந்தை முகமது முனிஸ், உறவுக்காரர் முகமது அகமது, மற்றும் கசின் சிஸ்டரான நேஹா பர்வீன் (18), ஆகியோர், தாக்குதல் நடந்தபோது, அந்தக் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர்கள் அனைவரும் துணை ராணுவ வீரர்கள் உதவியுடன் காயமின்றி தப்பித்தனர்.
இதில் நேகா பர்வீனுக்கு ஏப்ரலிலும், முகமது அனீஸுக்கு அதற்கு அடுத்த மாதமும் திருமணமாக உள்ளது. திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
புஷ்பேந்திர ரத்தோர் மேலும் கூறுகையில், "எங்களுக்கான, நல நிதியில் இருந்து ரூ .10 லட்சம் உதவித் தொகையை வழங்க முடிவு செய்துள்ளோம். மேலும், பிஎஸ்எப் பொறியியல் பிரிவு பதினைந்து நாட்களுக்குள் வீட்டை மீண்டும் கட்டிக் கொடுக்கும். இது அவருக்கு திருமண பரிசாக இருக்கும்" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications