பெட்ரோல், டீசல் விலை ரூ 2 உயர்வு.. இன்று நள்ளிரவு முதல் அமல்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை ரூ .2-க்கு மேல் உயர்த்தப்படுகிறது.
2019-2020-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத் தேர்தலில் 2-ஆவது முறையாக வெற்றி பெற்ற பாஜக அரசின் நிதி அமைச்சரான நிர்மலா இன்று முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டு வரும் சிறப்பு கூடுதல் கலால் வரி தலா ரூ 1 உயர்த்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் பெறப்படும் தொகை சாலை மேம்பாடு உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றார். மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ 100 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது கூடுதல் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 2.50, டீசல் லிட்டருக்கு ரூ, 2.30 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.