அதிகம் சம்பாதித்தால் அதிகம் வரி.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் விதித்த புதிய வரிகள்
Recommended Video
டெல்லி: கூடுதலாக வருவாய் ஈட்டினால் கூடுதலாக வரி செலுத்தும் வகையில், வரிகளை மாற்றியுள்ளார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இன்றைய பட்ஜெட் உரையில், பணக்காரர்களை குறி வைத்து அவர் வரி வலையை வீசினார் என்றே சொல்ல முடியும்.
ரூ .2 கோடி முதல் ரூ .5 கோடி வரை வருமானம் கொண்ட தனிநபருக்கு 3 சதவீத கூடுதல் வரியை நிர்மலா சீதாராமன் விதித்தார். ஆண்டுக்கு ரூ .5 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் நபர்களுக்கு, கூடுதல் வரியாக 7 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வருமான வரி செலுத்துபவர்களின் பிற பிரிவினருக்கு, வரி விகிதங்கள் மற்றும் வரி அடுக்குகள் மாறாமல் இருக்கும். வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கு ஆதார் மட்டும் போதும், பான் தேவையில்லை என்று சீதாராமன் அறிவித்தார்.
பிப்ரவரியில், நரேந்திர மோடி அரசு, வருமான வரி செலுத்துவோருக்கு வரி தள்ளுபடி மற்றும் நிலையான விலக்கு அதிகரிப்புடன் சில சலுகைகளை தனது இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 87 ஏ இன் கீழ் ரூ .12,500 வரை வருமான வரிச்சலுகையை அரசு அறிவித்தது. ஆண்டுக்கு ரூ .5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி கிடையாது என அப்போது அறிவிக்கப்பட்டது. அதுவே தொடரும் என நிர்மலா சீதாராமன் இப்போது கூறியுள்ளார்.
ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வங்கிக் கணக்கில் பணம் எடுத்தால் 2 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இதுவும் பணக்காரர்கள் மீதான சுமையாக மாறக்கூடும்.