"உண்மையான மதச்சார்பின்மை" என்றால் என்ன தெரியுமா.. ராஜ்யசபாவில் விளக்கமாக சொன்ன பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 8ஆம் நாள் இன்று கூடியது
டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 8ஆம் நாள் அமர்வு இன்று கூடுகிறது.. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் அமளிக்கு மத்தியில் ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து வருகிறார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கடந்த ஜன.31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அதற்கு மறுநாள் பிப்.1ஆம் தேதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிய வரி முறையில் இருப்போருக்கு 7 லட்ச ரூபாய் வரை வருமான வரி இல்லை என்று அறிவிக்கப்பட்டது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.

நாடாளுமன்றம்
இதற்கிடையே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரை நடைபெற இருந்தது. இருப்பினும் முதல் சில நாட்கள் அவையை எதிர்க்கட்சிகள் முற்றிலுமாக முடக்கின. அதானி குறித்து ஹிண்டர்ன்பெர்க் அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இருப்பினும், அது அரசு தொடர்பான விவகாரம் இல்லை என்பதால் இந்த விவகாரத்தை விவாதிக்க முடியாது என்று அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

ராகுல் காந்தி
இதன் காரணமாக சில நாட்கள் அவை தொடர்ந்து முடங்கியது. நேற்று முன்தினம் தான் அவை நடவடிக்கைகள் தொடங்கின. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பல எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினார்கள். அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அதானி விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் மத்திய அரசை சாடினார். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த காலத்தில் இருந்தே அதானி நெருக்கமாகவே இருந்ததாகக் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி எம்பிக்கள்
மேலும், மோடி பிரதமரான பின்னரே அதானி குழுமம் மேஜிக் வளர்ச்சியைப் பெற்றது என்றும் உலக பணக்காரர்களில் ஒருவராக வந்தார் என்றும் தெரிவித்தார். இது மட்டுமின்றி பிரதமர் மோடி மற்றும் அதானி ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் நாடாளுமன்றத்தில் காட்டினார். அவரை பேச விடாமல் பாஜக எம்பிகள் முழங்கினர். அதைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட பல கட்சி எம்பிகள் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசினர்.

பிரதமர் மோடி
இதற்கிடையே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் பதிலளித்தார். கொரோனா துயரத்தில் இருந்து நாடு மீண்டுவிட்டதாகத் தெரிவித்த அவர், உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா 5ஆவது பெரிய நாடாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஊடக வெளிச்சத்துக்காக சில தலைவர்கள் அவையில் இல்லாத விஷயங்களைப் பேசியதாக ராகுல் காந்தியை அவர் மறைமுகமாகச் சாடினார். மேலும், குடியரசுத் தலைவர் ஒரு பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலே அவரை அவமரியாதை செய்தனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

ராஜ்யசபாவில் பிரதமர் மோடி
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்கள் நடைபெற்றதாகத் தெரிவித்த அவர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடியது என்றும் கூறினார். இதற்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்பிகள் வெளிநடப்பு செய்தனர். நேற்று லோக்சபாவில் பிரதமர் மோடி பதிலளித்த நிலையில், இன்று ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். அதானி விவகாரம் குறித்து விசாரணை தேவை என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ள நிலையில், அமளிக்கு ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து வருகிறார்.

தாமரை தான் மலரும்
பிரதமர் மோடி, "மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கூடிய பொன்னான காலத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்தனர். இப்போது நாங்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு தருகிறோம். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பிறகு 11 கோடி வீடுகளுக்குக் குடிநீர் இனைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 9 ஆண்டுகளில் 49 கோடி பேருக்குக் குடிநீர் இனைப்புகளை வழங்கியுள்ளோம்.. பல்வேறு அரசுத் திட்டங்களின் பலன்கள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதே உண்மையான மதச்சார்பின்மை ஆகும். மக்கள் நலன் தான் எங்களின் முன்னுரிமை.. இதன் காரணமாகவே நாட்டில் உள்ள 25 கோடி குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்புகள் கிடைக்கச் செய்துள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications