ஹோம் லோன் இருக்கா? "வருமான வரி.." புதிய முறையில் இருப்போருக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்? நோட் பண்ணுங்க
டெல்லி: மத்திய அரசு சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில், இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களுக்கு உதவும் வகையில் வருமான வரி சார்ந்து முக்கிய உத்தரவுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே புதிய வரி முறையில் இருப்போருக்கும் சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிகை எழுந்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் சனிக்கிழமை பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நரேந்திர மோடி அரசின் 11ஆவது பட்ஜெட் இதுவாகும்.

மத்திய பட்ஜெட் 2025:
அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் மாறிவரும் நுகர்வு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்றும் வருமான வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் மிடில் கிளாஸ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணவீக்கத்தைச் சமாளிக்கும் அளவுக்கு ஊதியங்கள் உயராத நிலையில், புதிய வரி முறையின் இருப்போருக்குச் சலுகைகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் மக்கள் புதிய வரி முறைக்கு ஈர்க்க வேண்டும் என்றால் வீட்டு வாடகை அலவன்ஸ், பிரிவு 80C வரி விலக்குகள் உள்ளிட்ட விலக்குகளை புதிய வரி முறையிலும் கொண்டு வர வேண்டும் என வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
புதிய வரி முறை:
மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பழைய வரி முறைக்குப் பதிலாக புதிய வரி முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறையில் வரி விகிதங்கள் குறைவு, மேலும் வருமான வரி விலக்கு உச்ச வரம்பும் அதிகம். இருப்பினும், இதில் பழைய முறையில் இருப்பது போல வீட்டு வாடகை அலவன்ஸ் உள்ளிட்ட விலக்குகள் எதுவும் கிடைக்காது.
இரு வரி முறையில் இருப்போருக்கும் சில அடிப்படை வரி விலக்குகள் அளிக்கப்பட்டு இருந்தன. Standard deductionஆக புதிய மற்றும் பழைய முறையில் இருப்போருக்கு ரூ. 50,000 நிலையான விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் வருமான வரி பிரிவில் எந்த வரம்பில் இருந்தாலும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே கடந்த 2024 பட்ஜெட்டில் புதிய முறையில் இருப்போருக்கு இந்த விலக்கை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார்.
80C வரி விலக்கு:
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C பிரிவின் கீழ் மக்கள் சில இன்சூரன்ஸ், பிபிஎஃப், இபிஎஃப் ஆகியவற்றுக்கு முதலீடு செய்வதன் மூலம் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறலாம். பெரும்பாலான மக்கள் வரி விலக்கு பெற இந்த 80சி பிரிவையே தேர்வு செய்வார்கள். அதேபோல 80CCD(1B) இன் கீழ் கூடுதலாக ரூ.50,000 விலக்கு பெறலாம்.
வீட்டுக்கடன் அலவன்ஸ்:
அதேபோல வீட்டுக் கடனை திரும்பச் செலுத்தும்போது அதை 80EEஇன் கீழ் கணக்கு கூட்டியும் வரி விலக்கு பெறலாம். இதில் வீட்டுக் கடன் வட்டியின் அடிப்படையில் வருமான வரிச் சலுகைகளைப் பெறலாம். ஒரு நிதியாண்டில் சுமார் ரூ.50,000 வரை இதில் நமக்கு வரி விலக்கு கிடைக்கும். இவை அனைத்தையும் விடப் பழைய முறையில் அதிகம் பயன்படுத்தப்படுவது என்றால் அது HRA எனப்படும் வீட்டு வாடகைக்கான அலவன்ஸ் தான். தற்போது, இது பழைய முறையில் இருப்போருக்கு மட்டுமே கிடைக்கும். அடிப்படைச் சம்பளத்தில் 50% வரை இதன் மூலம் வரி விலக்கு பெறலாம்.
புதிய முறையில் அதிக வரி விலக்கு உச்ச வரம்பு இருந்தாலும் கூட இதுபோல அதிகப்படியாக இருக்கும் வரி விலக்குகளே மக்கள் பலரும் பழைய முறையில் இருக்கக் காரணமாக இருக்கிறது. அவை அனைத்தையும் புதிய முறையில் கொண்டு வர முடியாது என்ற போதிலும், இன்சூரன்ஸ்களுக்கான 80சி, வீட்டுக்கடனுக்கான 80EE, வீட்டு வாடனை அலவன்ஸ் ஆகியவற்றுக்கான வரி விலக்கை மட்டுமாவது புதிய வரி முறைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications