நாடு முழுக்க வரும் புல்லட் ரயில்? மத்திய அரசின் மாஸ் பிளான்.. விரைவில் தொடங்க இருக்கும் நடவடிக்கை
டெல்லி: பிரதமர் மோடியின் கனவு திட்டமான புல்லட் ரயில் திட்டத்தை நாடு முழுக்க கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறு ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி உரையில் கூறப்பட்டுள்ளது. தற்போது மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த புல்லட் ரயில் சேவையை 2026-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை - அகமதாபாத் இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழித்தட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை - அகமதாபத் இடையேயான 508 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 2 மணி நேரம் 7 நிமிடத்தில் செல்லும் வகையில் இந்த புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சூரத், வதோதரா, அகமதாபாத் உள்ளிட்ட சில ஸ்டேஷன்களில் மட்டுமே இந்த ரயில் நின்று செல்லும் வகையில் திட்டம் தயாராகி வருகிறது. மகாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், முழு நடைபாதையும் முடிவடையும் தேதி இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் குஜராத் வழியாக 352 கிமீ பகுதியில் 50 கிமீ பகுதியைத் முதல்கட்டமாக 2026-ல் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 2027 இல் முழுமையாக திறக்கப்படும் என சொல்லப்படுகிறது. மும்பை- அகமதாபாத் மட்டும் இன்றி பல்வேறு வழித்தடங்களிலும் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்தான் இன்று ஜனாதிபதி உரையிலும் இது தொடர்பான அறிவிப்பு இடம் பெற்று இருந்தது.
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியதாவது:- நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளிலும் புல்லட் ரயிலுக்கான பாதை அமைக்க சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் வழித்தடம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது" என்றார்.
மும்பை- அகமதாபாத் மட்டும் இன்றி சென்னை, பெங்களூர் மற்றும் மைசூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லெட் ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின. அதாவது, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள 9 நிலையங்கள் வழியாக புல்லெட் ரயில் இயக்கப்படும் என தகவல் வெளியானது. சென்னை - மைசூர் அதிவேக ரயில் (CBM புல்லட் ரயில்) திட்டம் 435 கிமீ தூரம் செல்லும் உத்தேச அதிவேக ரயில் பாதை.
இதில் தொடக்க ஸ்டேஷன் சென்ட்ரல் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ராஜா முத்தையா ரோடு - சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே இந்த புல்லட் ரயில் நிலையம் அமைக்கப்படும். இது முழுக்க முழுக்க அண்டர் கிரவுண்ட் முறையில் சென்னையில் அமைக்கப்படும். சென்னைக்கு வெளியே செல்ல செல்ல இது வெளியே வரும்.
சென்ட்ரல் ஏற்கனவே மெட்ரோ, பேருந்து நிலையம், ரயில் நிலையத்தை கொண்டு இருப்பதால் புல்லட் ரயில் வரும் பட்சத்தில் அந்த பகுதியே மாற்றம் அடையும், சென்னை பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வே சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதே பாதைக்கு அருகே புல்லட் ரயில் கொண்டு வரப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications