புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை வீடுகள்.. மத்திய அரசு அதிரடி திட்டம்!
டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த விலை வாடகை வீடுகள் வழங்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு மற்றும் பொருளாதார சரிவுக்கு இடையே பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவை சரிக்கட்ட இதில் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுடன் சந்திப்பு நடத்தினார். இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் விளக்கினார்.
அதில், இடம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்காக நகர்ப்புறங்களில் குறைந்த வாடகையில் அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான உதவிகள் செய்யப்படும்.
அதேபோல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த விலை வாடகை வீடுகள் வழங்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நவம்பர் 2020 வரை திட்டத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறோம்.
107 நகரங்களில் 1,08,000 வீடுகள் இடம்பெயர் தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வழங்கப்படும். மத்திய அரசின் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் 3 இலவச சிலிண்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 7.4 கோடி ஏழை பெண்கள் பயனடைவர்: இத்திட்டத்துக்காக மத்திய அரசு ரூ13,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு அளிக்கப்படும். திட்டத்திற்கு 1.49 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications