வருங்கால வைப்பு நிதி திட்டம்.. பிஎப் தொகையை மத்திய அரசே மேலும் 3 மாதத்திற்கு செலுத்தும்.. அதிரடி!
டெல்லி: நாடு முழுக்க வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் ஊழியர்கள், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 24% தொகையை அரசே செலுத்தும் திட்டமும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவை சரிக்கட்ட இதில் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுடன் சந்திப்பு நடத்தினார். இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் விளக்கினார்.
அதில், நவம்பர் வரை ரேசனில் இலவச உணவுப் பொருட்கள் வழங்க வகை செய்யும் வகையில் பிரதம மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதம மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏப்ரலில் 74.3 கோடி பேரும் மே மாதத்தில் 74.75 கோடி பேரும் ஜூன் மாதத்தில் 64.72 கோடி பேரும் பயனடைந்துள்ளனர்.
லாக்டவுன் அமலில் இருப்பதால் மேலும் 3 மாதங்களுக்கு 24% பிஎப் தொகையை (நிறுவனங்களின் 12%; தொழிலாளர்களின் 12% பங்கு) மத்திய அரசே செலுத்தும். பிஎப் தொகையை ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசு செலுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பி.எப். தொகையை அரசு செலுத்துவதால் 72 லட்சம் பேர் பயனடைவர். மத்திய அரசுக்கு ரூ4,860 கோடி செலவாகும். 90% ஊழியர்களின் மாத ஊதியம் ரூ .15,000 க்கும் குறைவாக இருக்கின்றன. இதனால் 100 ஊழியர்கள் வரை பணியாற்றுகிற நிறுவனங்களின் பிஎப் தொகையை மத்திய அரசு செலுத்தும்.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களான ஜெனரல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிதிநிலையை உயர்த்த ரூ12,450 மோடி நிதி உதவி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறோம், என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications