மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் திருவிழா க்ளைமாக்ஸ்.. நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு!
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில 2-வது கட்ட சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. இரு மாநிலங்களிலும் நவம்பர் 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் இறுதி கட்ட பிராசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள். இதில் 43 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 13-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 38 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

முதல்வர் ஹேமந்த் சோரன் (பார்ஹெய்த் தொகுதி), முன்னாள் முதல்வர் சாம்பாய் சோரன் ( சரெய்கேலா), பாபுலால் மராண்டி (தன்வார்), சீதா சோரன் (ஜம்தாரா),கல்பனா சோரன் (காண்டே), ராமேஸ்வரம் ஓரான் (லோகர் தாகா), பசந்த் சோரன் (தும்கா), கீதா கோடா (ஜகநாத்பூர்), சுனில் சோரன் (தும்கா) ஆகியோர் ஜார்க்கண்ட் மாநில 2-வது கட்ட தேர்தலில் களம் காணும் விஐபி வேட்பாளர்கள். 38 தொகுதிகளில் மொத்தம் 528 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ்- ஆர்ஜேடியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி மற்றும் பாஜக, ஜேடியூ உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாட்டி இடையே இம்மாநிலத்தில் கடும் போட்டி நிலவுகிறது. மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 81, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களில் போட்டியிடுகின்றன. மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ் 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உத்தவ் தாக்கரே சிவசேனா 95, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களில் களம் காண்கின்றன. 237 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி 200 இடங்களிலும் ராஜ்தாக்கரேவின் நவநிர்மாண் சேனா தனித்து 125 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளில் 158 அரசியல் கட்சிகளின் 2,050 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சமமாக 2,086 சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 288 தொகுதிகளில் 4,136 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்ற்னர்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் இரு மாநிலங்களிலும் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் அனைத்து கூட்டணிகளின் தலைவர்களும் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications