ராகுல் காந்தி 2024 தேர்தலில் போட்டியிட முடியுமா? அதிர்ச்சியில் காங்கிரஸ்.. அப்போ பிரதமர் வேட்பாளர்?
டெல்லி : ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இன்று ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பால் ராகுல் காந்தி 2024 தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிரான வியூகத்தை அமைக்க திட்டமிட்டு வருகின்றன.
ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்படலாம் என்ற சூழல் உள்ள நிலையில், ராகுல் காந்தி 2024 தேர்தலில் போட்டியிடவே முடியாது என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2 ஆண்டுகள் ஜெயில்
2019 தேர்தலின்போது கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்துப் பேசியது, குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, குஜராத்தின் பாஜக எம்.எல்.ஏ ஒருவர், ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் நேற்று, ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி உடனடியாக ஜாமீன் பெற்றார். மேலும், ராகுல் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ராகுல் தகுதி நீக்கம்
இந்நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்பையடுத்து, வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் இணையதளத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து ராகுல் காந்தியின் பெயர் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம்
1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(3)ன் படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எந்தக் குற்றத்திற்காகவும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், தண்டனை காலம் மற்றும் அதற்கு பிறகான 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. அதன்படி 2 ஆண்டுகள் தண்டனை காலம் மற்றும் 6 ஆண்டுகள் என மொத்தம் 8 ஆண்டுகள் ராகுல் காந்தியால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2024 தேர்தலில்?
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவர் மீதான வழக்கின் தண்டனையை ரத்து செய்யாவிட்டாலோ அல்லது நீதிமன்றம் தண்டனையின் அளவை 2 ஆண்டுகளுக்குக் கீழ் குறைக்காவிட்டாலோ, ராகுல் காந்தியால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலை தற்போது எழுந்துள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படவிருக்கும் நிலையில், அவர் 2024 தேர்தலிலேயே போட்டியிட முடியாத நிலை கண்டு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இடைத்தேர்தல்
ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவரது தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், ராகுல் காந்தி உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சூரத் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், லோக்சபா செயலகம், ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து, அவரது தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், காலியாக உள்ள வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தலை இப்போது தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம். டெல்லியில் உள்ள தனது அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்தியை மத்திய அரசு கேட்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றத்தை நாடுவார்
லோக்சபா செயலகத்தின் இன்றைய அறிவிப்பை எதிர்த்து ராகுல் காந்தி நீதிமன்றத்தில் முறையிடுவார் என்று கருதப்படுகிறது. தண்டனை இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சூழலில் தன்னை தகுதி நீக்கம் செய்தது தவறு என முறையிடக்கூடும். தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய ஜனாதிபதியால் மட்டுமே முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். எனவே, ராகுல் காந்தி, தனக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவார் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications