Cancer Treatment: புற்றுநோய் சிகிச்சை மருந்துகள் விலை குறையும்.. பட்ஜெட்டில் நிம்மதி தரும் அறிவிப்பு
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் 17 வகையான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி ரத்து செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இதேபோன்று 7 வகை அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் நாடு முழுவதும் புற்று நோய் பாதிக்கப்பட்டுள்ள பல ஆயிரம் பேருக்கான மருந்து செலவுகள் குறைய வாய்ப்புள்ளது.

17 வகையான மருந்துகளுக்கு
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 -2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசினார். இதில் குறிப்பாக தனிநபருக்கான வருமான வரியில் மாற்றம் இல்லை என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதேபோன்று புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் 17 வகையான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி ரத்து செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் 17 வகையான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இம்மருந்துகள் மலிவான விலையில் கிடைக்கும்.
சுங்க வரியில் இருந்து விலக்கு
இதேபோல், 7 அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கும் சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நோயாளிகளுக்கு நிதிச் சுமையை குறைத்து, சிகிச்சைக்கான வழிவகைகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பல மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது இந்த மருந்துகளுக்கு விதிக்கப்படும் சுங்கவரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், மருந்துகளின் இறக்குமதி செலவு குறையும். இதனால் மருந்துகளின் சந்தை விலையும் குறைய வாய்ப்பு உள்ளது. இது, நீண்டகால சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும்.
இது தொடர்பாக சுகாதார நிபுணர்கள் கூறுகையில் "சில சதவீதம் விலை குறைந்தால்கூட, மாதக்கணக்காக, ஆண்டுக்கணக்காக சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு பெரிய அளவில் நிதிச்சுமையை குறைக்கும்" என்றனர்.
மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும்
இந்த நடவடிக்கை, இந்தியாவில் மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் "தன்னிறைவு" கொள்கையையும், உடனடி நோயாளர் தேவைகளையும் சமநிலைப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. நாட்டில் தயாரிக்க முடியாத அத்தியாவசிய மருந்துகளுக்கு மட்டும் இவ்வாறான வரி சலுகைகள் வழங்கப்படுகின்றன.
புற்றுநோய் மற்றும் அரிய நோய்கள் சிகிச்சைக்காக ஆகும் செலவினை சமாளிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் அவதிப்பட்டும் வரும் நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியாக பார்க்கப்படுகிறது. முழு சுமை குறையாவிட்டாலும், "சிகிச்சை தொடர முடியுமா? முடியாதா? என்ற அச்சத்தில் இருக்கும் பல குடும்பங்களுக்கு இது சற்று நிதி நிவாரணத்தை அளிக்கும் என நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications