இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அமைக்க விரும்பும்.. அமைப்புகளை அனுமதிக்க முடியாது.. மத்திய அரசு வாதம்
டெல்லி: இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க விரும்பும் எந்த அமைப்புகளையும் அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
சிமி இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும் போது, மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட பிறகும் கூட இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் சிமி இயக்கம் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவு உண்மைதான்! ஒப்புக் கொண்டதா ஐசிஎம்ஆர்? மத்திய அரசு கொடுத்த விளக்கம்
தடை செய்யப்பட்ட சிமி
இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கம் (சிமி) என்ற பெயரிலான அமைப்பு ஒன்று 23 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் செயல்பட்டு வந்தது. இதனிடையே, அந்த அமைப்புக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், நாட்டுக்கு எதிரான சதிச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதன்பேரில் கடந்த 2001-ம் ஆண்டு சிமி இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது.
தடைக்கு எதிராக மனு
5 ஆண்டுகள் விதிக்கப்பட்ட இந்த தடை அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கடந்த 2019-ம் ஆண்டும் சிமி மீது 8-வது முறையாக மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடையை எதிர்த்து சிமி அமைப்பின் உறுப்பினர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
"இஸ்லாமிய ஆட்சி.."
இதன்பேரில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை சார்பில் பதில் மனு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சிமி இயக்கம் இந்திய தேசியத்திற்கு எதிரான ஒரு அமைப்பு. அந்த அமைப்பின் விதிமுறைகள் அனைத்தும் நம் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு முற்றிலும் முரணானது ஆகும். குறிப்பாக, இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது சிமி அமைப்பின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இவ்வாறு இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை கோரும் அமைப்புகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
"தடைக்கு பிறகும் இயங்குகிறது"
எனவேதான், சிமி மீது 8-வது முறையாக 2019-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. 2001-இல் தடை செய்யப்பட்ட பிறகும் கூட 30-க்கும் மேற்பட்ட இயக்கங்களுடன் சேர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல்களிலும் அது ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.