சிபிஐ இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு.. அடுத்த வாரம் விசாரணை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!
சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கும் நாகேஸ்வர ராவின் நியமனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டு இருக்கும் வழக்கு அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
டெல்லி: சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கும் நாகேஸ்வர ராவின் நியமனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டு இருக்கும் வழக்கு அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
சில நாட்களுக்கு முன் சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டார். இதையடுத்து அலோக் வெர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு கமிட்டி கூடி இந்த முடிவை எடுத்தது.
இதனால் முன்னாள் இடைக்கால சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் மீண்டும் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டார். கடந்த 2018 அக்டோபரில் அலோக் வெர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட போதும் கூட, நாகேஷ்வர ராவ்தான் இடைக்கால இயக்குனராக செயல்பட்டார்.
இரண்டாவது முறையாக நாகேஸ்வர ராவ் மீண்டும் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நாகேஸ்வர ராவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. காமன் காஸ் என்ற அமைப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக எடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஆனால் வழக்கை அவசர வழக்காக எடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சிபிஐ இயக்குனர் இல்லாத சமயத்தில், புதிய சட்டத்தின்படி இடைக்கால இயக்குனரை நியமிக்க முடியாது, இயக்குநரைத்தான் நியமிக்க வேண்டும். அதனால், இடைக்கால இயக்குனரின் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. திங்கள் கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.