காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் நாளை 'கூடி கலையும்'? எப்போது உரிய நீர் கிடைக்குமாம்?
டெல்லி: காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா மாநில அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது; இந்த குழுவானது கர்நாடகாவின் மழை அளவு, அணைகளின் நீர் இருப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைக்கும். இதனை உத்தரவாக காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும்.

இந்த ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த எந்த உத்தரவையும் கர்நாடகா அரசு மதித்து நடக்கவில்லை. தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை முறைப்படி கர்நாடகா திறந்துவிடவில்லை. தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீரைக் கூட திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு, உள்ளிருப்பு போராட்டங்கள்தான் கர்நாடகாவில் தொடர்ந்து நடைபெறுகின்றன.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 27-வது கூட்டம் கடந்த நவம்பர் 3-ந் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கன அடிநீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. நவம்பர் 1 முதல் நவம்பர் 23-ந் தேதி வரை இந்த நீரை திறக்க வேண்டும் என்பது உத்தரவு. ஆனால் காவிரியில் கர்நாடகா அரசு, தமிழ்நாட்டுக்கான நீரை முழுமையாக திறந்துவிடவில்லை.
இந் நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்கப்பட்ட அளவு உள்ளிட்டவை குறித்து ஒழுங்காற்று குழு ஆய்வு செய்ய உள்ளது. இந்த ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை மாநில அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications