ஓடவும் ஒளியவும் முடியாது- 'NSE 'சித்ரா ராமகிருஷ்ணன் தேடப்படும் நபர்- சிபிஐ அதிரடி நோட்டீஸ்!
டெல்லி: நிதி மோசடி வழக்கில் தேடப்படும் தேசிய பங்கு சந்தையான NSE-ன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் தேடப்படும் நபர் என சிபிஐ அதிரடியாக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
தேசிய பங்கு சந்தை தொடர்பான பல்வேறு அதிமுக்கியமான ரகசிய தகவல்களை இமயமலை சாமியார் ஒருவரிடம் சித்ரா ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார் என்கிறது இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியம் செபி SEBI.

சாமியார் பிடியில் சித்ரா
2016-ம் ஆண்டு சித்ரா ராமகிருஷ்ணன் தமது பொறுப்பில் இருந்து விலகினார். சித்ரா ராமகிருஷ்ணன் நிதி முறைகேடுகள் தொடர்பாக செபி விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. தேசிய பங்கு சந்தையையே அந்த இமயமலை சாமியார்தான் ஆட்டுவித்தார்; அந்த சாமியார் என்ன சொல்கிறாரோ அதன்படி மட்டுமே சித்ரா ராமகிருஷ்ணன் செயல்பட்டார் என தெரியவந்தது.

செபி அதிரடி தடை
இமயமலை சாமியார் சொல்படியே நியமனங்களை மேற்கொண்டு நிதி மோசடி செய்தார் என நீள்கிறது குற்றப்பட்டியல். இதனால் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ரூ3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் பங்கு சந்தை நடவடிக்கைகளில் 3 ஆண்டுகள் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.

அடேங்கப்பா விளக்கம்
செபியிடம் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் இடைத்தரகராகவும் சித்ரா ராமகிருஷ்ணன் செயல்படவும் அதிரடி தடை விதிக்கப்பட்டது. ஆனால் சித்ரா ராமகிருஷ்ணனோ, நீங்கள் எல்லாம் ஒரு கைடு வைத்திருக்கிறீர்கள். அப்படித்தான் எனக்கு சாமியார்தான் கைடு.. அதில் என்ன தப்பு என விளக்கம் கூட அளித்தாராம் சித்ரா ராமகிருஷ்ணன். ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கையை விவரிக்கும் ஓடிடி சீரியலில் இப்படியும் ஒரு சாமியார் கைடாக வருவதுதான் நமக்கு நினைவுக்கு வருகிறது.

இ மெயில் சாமியார்
இத்தனைக்கும் முதல் முறையாக கங்கை நதிக்கரையில் சாமியாரை சந்தித்தேன்; 20 ஆண்டுகளாக அவர்தான் எனக்கு வழிகாட்டி. அவரது நிரந்தர முகவரி அனேகமாக இமயமலையாக இருக்கலாம்.. அவருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு வழிகாட்டுதல்களைப் பெற்றேன் என்றெல்லாம் சித்ரா ராமகிருஷ்ணன் அகத்தியனின் காதல்கோட்டையைவிட அசத்தலான கதையை சொல்ல கிறுகிறுத்துப் போயினர் செபி அதிகாரிகள். 1992-ல் தேசிய பங்கு சந்தை உருவாக்கப்பட்ட போது முதல் சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றினார். 2016-ம் ஆண்டு டிசம்பர் 2-ல்தான் பதவி விலகினார். 2016-ம் ஆண்டு நிதி ஆண்டில் மட்டும் 8 மாதங்களில் சித்ரா ராமகிருஷ்ணன் ஊதியமாக பெற்ற தொகை மட்டும் ரூ22.98 கோடி. இத்தனைக்கும் 2015-2016 நிதி ஆண்டில் சித்ரா ராமகிருஷ்ணனின் மொத்த ஊதியம் வெறும் ரூ7.87 கோடி. ஒரே நிதி ஆண்டில் 3 மடங்கு ஊதியம் உயர்த்தப்பட்டது. இத்தகைய கண்ணை அயரவைக்கும் ஊதிய உயர்வு, நியமனங்கள்தான் சித்ரா ராமகிருஷ்ணனின் நிஜமுகத்தை அம்பலமாக்கியது. அதேபோல் ஆனந்த் சுப்பிரமணியன் என்ற ஆலோசகரை நியமித்ததிலும் சித்ராவின் மோசடியை தோலுரித்தது செபி.

லுக் அவுட் நோட்டீஸ்
[email protected] என்ற ஒற்றை மின்னஞ்சல் சாமியார்தான் இத்தனை தகிடுத்தத்தங்களுக்கும் காரண கர்த்தா. இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான பல வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணனை விசாரணைக்கு அழைக்க ஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனிடையே சித்ரா ராமகிருஷ்ணன் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடாத வகையில் அவர் தேடப்படும் நபர் என்கிற லுக் அவுட் நோட்டீஸ் விட்டிருக்கிறது சிபிஐ. இதனால் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு எதிரான பிடி இறுகி வருகிறது.












Click it and Unblock the Notifications