பிடியை இறுக்கும் சிபிஐ! உளறிக் கொட்டிய டிரைவர்.. குறுக்கே புகுந்த ஆதவ் அர்ஜுனா! போனை போட்ட விஜய்
டெல்லி: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகிய துயரச்சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன் ஆகியோரிடம் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 31) மூன்றாவது நாளாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விசாரணையின் போது நிர்வாகிகளிடம் விஜய் அடிக்கடி தகவல்களை கேட்டுப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரன் நேற்கொண்ட போது நடந்த துயரமான கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தது தமிழக அரசியல் உலகையே அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இந்த விசாரணை மூன்றாவது நாளாக இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன் ஆகியோர்களும் இந்த விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

கரூர் நெரிசல்
முதலில் கரூரில் நடைபெற்ற நேரடி விசாரணைக்கு பிறகு, அடுத்த கட்டமாக டெல்லி அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக தவெக நிர்வாகிகளிடம் நீண்ட நேரம் கேள்வி பதில் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்ட அரசுத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளும் ஆஜராகி விளக்கமளித்தனர். முதல் நாளில் தவெக நிர்வாகிகள், 43 பக்க ஆவணங்களும், சில வீடியோ பதிவுகளும், வாய்ஸ் மெசேஜ்களும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர்.
சிபிஐ விசாரணை
அந்த ஆவணங்களின் அடிப்படையில் அதிகாரிகள் நேற்று மேலும் விரிவாக கேள்வி கேட்டுள்ளனர். அதே நேரத்தில் அரசு அதிகாரிகள் தங்களது தரப்பிலும் சில விளக்கங்களை வழங்கியதாக தெரிய வருகிறது. இந்த விசாரணையின் போது விஜயின் பிரசார பேருந்தை ஓட்டிய டிரைவரிடமும் அதிகாரிகள் கேள்வி கேட்டனர். பேருந்தை கூட்டத்தின் நடுவே இயக்கியதற்கான காரணம் என்ன, யார் உத்தரவு கொடுத்தார்கள் போன்ற கேள்விகளுக்கு அவர் சில நேரங்களில் தடுமாறியதாக கூறப்படுகிறது. அந்த நேரங்களில் ஆதவ் அர்ஜூனா பேசிச் சில விளக்கங்களை அளித்ததாக தகவல்கள் வெளியாகின்றன.
போனை போட்ட விஜய்
விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையில், விஜயும் தொடர்ந்து தன் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்து விசாரணை பற்றி கேட்டதாகவும் கூறப்படுகிறது. விசாரணை அழுத்தமாக நடக்கிறதா, தன்னையும் சிபிஐ அழைப்பார்களா என்று விஜய் ஆர்வமாக கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு தவெக நிர்வாகிகள், விசாரணை அமைதியாகவே நடந்து வருகிறது என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெறுகிறது.
டெல்லி சிபிஐ
தவெக நிர்வாகிகள் மட்டும் அல்லாமல் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளும் மீண்டும் ஆஜராகியுள்ளனர். இந்த விசாரணை இன்னும் எத்தனை நாள் தொடரும் என்பது பற்றி தெளிவான தகவல் வெளிவரவில்லை. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ முழுமையான உண்மையை வெளிக்கொணர முயற்சி செய்து வருவது உறுதி என்கின்றனர் அதிகாரிகள். ஆனால், அது விஜய்க்கு சாதகமாக இருக்குமா? பாதகமாக இருக்குமா? என்பது தான் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications