முடிவிற்கு வந்தது சிபிஐ vs சிபிஐ வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வருகிறது தீர்ப்பு!
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் விசாரணையை நிறைவு செய்துள்ளது.
டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது விசாரணையை நிறைவு செய்துள்ளது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து இருக்கிறது.
இந்த வழக்கு விசாரணை 45 நாட்கள் நடைபெற்றது. எல்லா வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இதன் விசாரணை நடைபெற்றது. சில நாட்கள், புதன் கிழமையும் விசாரணை நடந்தது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சன் கிஷான் கவுல், நீதிபதி கேஎம் ஜோசப் தரப்பு விசாரணை நடத்தியது. காங்கிரஸ் தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல், அலோக் வெர்மா தரப்பில் வழக்கறிஞர் நாரிமன், மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் கேகே வேணுகோபால், வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானா தரப்பில் வழக்கறிஞர் ரோத்தகி ஆகியோர் ஆஜராகி இதில் வாதம் செய்தனர்.
இந்த வழக்கு கடந்து வந்த பாதை மிகவும் பெரியது, கொஞ்சம் சிக்கலானது!
1. குஜராத்தை சேர்ந்த இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷி பண மோசடி மற்றும் வரி மோசடி செய்த வழக்கில் சிக்கி இருக்கிறார். இவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
2. குரேஷியின் வழக்கில் தொடர்புடைய நபர்களை விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
3. இதனால் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் உத்தரவின் பேரில் சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
4. இன்னொருபுறம் அலோக் வெர்மா மீது ராகேஷ் அஸ்தானா ஊழல் லஞ்ச புகார் அளித்தார். லாலு பிரசாத் வழக்கில் லஞ்சம் வாங்கியதாக குறிப்பிட்டார்.
5. இதனால் சிபிஐ அமைப்பிற்குள் அதிகார மோதல் ஏற்பட்டது. சிபிஐ மீது சிபிஐ வழக்கு பதிந்து, சிபிஐ அலுவலகத்திலேயே சோதனை செய்தது.
6. உடனே தலையிட்ட மத்திய அரசு கடந்த அக்டோபர் 23ம் தேதி சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பித்தது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ பொறுப்பு இயக்குனராக செயல்படுவார் என்றது.
7. இந்த கட்டாய விடுப்பிற்கு எதிராக இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்தார். இந்த வழக்கில்தான் தற்போது விசாரணை நடந்து முடிந்துள்ளது.
8. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இதற்காக விசாரணை கமிட்டி அமைத்தார். அலோக் வெர்மாவிற்கு எதிராக அஸ்தானா வைக்கும் புகார்கள் உண்மையா, மத்திய அரசின் நடவடிக்கை சரியா என்று அறிக்கை தாக்கல் செய்ய கூறினார்.
9. விஜிலென்ஸ் கமிஷன் உறுப்பினர்களை கொண்ட விசாரணை கமிட்டியை அமைத்தார். இவர்கள் வழங்கிய விசாரணை அறிக்கையை முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏகே பட்நாயக் சோதனை செய்தார்.
10. இந்த விஜிலன்ஸ் அறிக்கை கடந்த நவம்பர் 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்கே கவுல் அமர்வு சோதனை செய்தனர்.
11. இதில் அலோக் வெர்மாவிற்கு சாதகமாகவும், எதிராகவும், நடுநிலையாகவும் நிறைய கருத்துக்கள் இருப்பதாக நீதிபதிகள் கூறினார்கள்.
12. இந்த விசாரணை அறிக்கை மீதான பதில் மனுவை சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தாக்கல் செய்தார். இந்த பதில் மனு மீதான விசாரணை நடந்தது. அதன்பின் நான்கு முறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்தது.
13. இந்த நிலையில் 45 நாட்கள் முடிந்து இன்று இந்த வழக்கின் விசாரணை முடிந்தது. தற்போது இதன் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் இதன் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது சிபிஐ தொடர்பான தீர்ப்பு என்பதால் பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications