இன்று தொடங்கும் சிபிஎஸ்இ 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு.. திடீரென சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
டெல்லி: நாடு முழுக்க இன்று சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் +2 மாணவ-மாணவிகளுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்குகிறது. சுமார் 39 லட்சம் மாணவ மாணவிகள் இத்தேர்வை எழுத உள்ளனர்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் +2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்குகிறது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கும் பொதுத்தேர்வு வரும் மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதேபோல +2 மாணவர்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்தாண்டு நாடு முழுக்க மொத்தம் 39 லட்சம் மாணவர்கள் இந்த பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
பொதுத்தேர்வு: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் படிப்பார்கள். இதனால் இந்தாண்டு இந்தியா உட்பட மொத்தம் 26 நாடுகளில் இந்த சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடக்க இருக்கிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று காலை 10.30 மணிக்குப் பொதுத்தேர்வு தொடங்குகிறது. பெரும்பாலான தேர்வுகள் 1.30 மணி வரை நடக்கும் நிலையில், சில தேர்வுகள் மட்டும் 12.30 மணி வரை மட்டும் நடக்கிறது.
பொதுத் தேர்வுகள் சுமுகமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய மாணவ மாணவிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதாவது மாணவர்கள் தேர்வு தொடங்குவதற்குக் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:
அறிவுறுத்தல்: தேர்வு அறைக்கு மாணவர்கள் அட்மிட் கார்டை நிச்சயம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், அட்மிட் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள பிற ஆவணங்களையும் எடுத்துச் செல்லவும். நீலம் அல்லது கருப்பு பால்பாயிண்ட் பேனா, பென்சில் மற்றும் ரப்பர் என உங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் நீங்களே எடுத்து வர வேண்டும். தேர்வு எழுதும் அறையில் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் போன்ற சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை.
வினாத்தாளில் உள்ள வழிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும்.. கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முன் அதைக் கவனமாகப் படிக்கவும். வினாத்தாள்களில் எதையும் எழுதக் கூடாது.. அனுமதியின்றி தேர்வு அறையை விட்டு வெளியே வர வேண்டாம். பரீட்சையில் காப்பி அடிக்க முயல வேண்டாம்.. அருகே இருக்கும் மாணவர்களுடன் பேசக் கூடாது. டெல்லியில் வசிக்கும் மாணவர்கள் முன்கூட்டியே கிளம்ப வேண்டும்.. சரியான நேரத்தில் தேர்வு மையங்களுக்கு வர மெட்ரோ சேவைகளைப் பயன்படுத்தலாம்.
போலி தகவல்கள்: சிபிஎஸ்இ நிர்வாகம் மேற்சொன்ன இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. டெல்லியில் விவசாய போராட்டங்கள் நடக்கும் நிலையில், இதன் காரணமாகவே மாணவர்களை முன்கூட்டியே கிளம்ப சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. இது மட்டுமின்றி தேர்வு குறித்து இணையத்தில் பரவும் போலி தகவல்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.
தேர்வுத்தாள்கள் லீக் ஆகிவிட்டது என்று சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள் பரவக் கூடும்.. அதாவது மாதிரி தாள்களைப் பரப்பி இதுதான் பொதுத்தேர்வு கேள்வித்தாள்கள் என இணையத்தில் சிலர் பொய் தகவல்களைப் பரப்பலாம். பணம் செலுத்தினால் கேள்வித்தாளைக் கொடுக்கிறோம் என்றும் அவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளக்கூடும்.. இதுபோல அவர்கள் சொல்லும் பொய் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது,.












Click it and Unblock the Notifications