பறவைக்காய்ச்சல் பீதி... டெல்லியில் கண்காணிப்பு மையம்... தமிழகத்துக்கு, மத்திய அரசு எச்சரிக்கை!
டெல்லி: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கண்காணிப்பு மையம் அமைத்துள்ளது.
பறவைகளின் இறப்பு விவரங்கள் குறித்த விவரங்களை மாநில அரசுகள் வாரம் ஒரு முறை கண்காணிப்பு மையத்திடம் அறிக்கை அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

பறவை காய்ச்சல் பீதி
இந்தியாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சறுத்தி வரும் நிலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்கள் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுளளதை உறுதிப்படுத்தியுள்ளன.

விரைவு நடவடிக்கை தேவை
பறவைக் காய்ச்சல் காரணமாக இந்த மாநிலங்களில் லட்சக்கணக்கான கோழிகள், வாத்துக்கள், காகங்கள் உள்பட பறவைகள் இருந்துள்ளன. பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கண்காணிப்பு மையம்
இந்த நிலையில் பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் மாநிலங்களுக்கு அவ்வபோது அறிவுறுத்தல்களை வழங்குவது தொடர்பாகவும் மத்திய அரசு டெல்லியில் கண்காணிப்பு மையம் ஒன்றை அமைத்துள்ளது. மத்திய கால்நடை வளர்ப்புத்துறையின் சார்பில் இந்த கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அறிக்கை வேண்டும்
பறவைக்காய்ச்சல் அச்சறுத்துதல் உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, இமாச்சல பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பறவைகளின் இறப்பு விவரங்கள் குறித்த விவரங்களை மாநில அரசுகள் வாரம் ஒரு முறை கண்காணிப்பு மையத்திடம் அறிக்கை அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்துக்கு எச்சரிக்கை
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications