பரமக்குடி டூ ராமநாதபுரத்திற்கு வருது 4 வழிச்சாலை.. சும்மா சல்லுனு போகலாம்! மத்திய அரசு மேஜர் முடிவு
டெல்லி: பரமக்குடி டூ ராமநாதபுரம் வரை 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1,853 கோடி மதிப்பில் இந்த பணியானது மேற்கொள்ளப்பட இருக்கிறது. 4 வழி தேசிய நெடுஞ்சாலையாக பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை 46.7 கி.மீ. தூரம் இந்த சாலை அமைக்கப்படும்.
இரு வழிச்சாலையாக இருந்து தற்போது 4 வழிச்சாலையாக மாற்றப்படுவதனால், இந்த விரிவாக்க சாலையானது 5 தேசிய நெடுஞ்சாலைகள், 3 மாநில நெடுஞ்சாலைகள், மதுரை, ராமேசுவரம் ஆகிய 2 ரயில் நிலையங்கள், பாம்பன், ராமேசுவரம் ஆகிய 2 சிறு துறைமுகங்களை இணைப்பதாக இருக்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 4 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேசிய விளையாட்டுக் கொள்கை 2025, ரூ. 1 லட்சம் கோடி நிதியுடன் கூடிய ஆராய்ச்சி மேம்பாடு, புதுமை திட்டம் (ஆர்டிஐ), வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் மற்றும் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரையிலான 4 வழிச்சாலைக்கான கட்டுமான திட்டம் என 4 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த திட்டங்கள் பற்றி விளக்கம் அளித்து இருந்தார். தமிழகத்தின் பரமக்குடி - ராமநாதபுரம் வரை 46.7 கிமீ தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைப்பதற்கு ரூ.1853 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
4 வழிச்சாலை
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்த வழித்தடமானது தற்போது இரண்டு வழி சாலையாக உள்ளது. மதுரையில் இருந்து பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதனோடு தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகள் இணைந்த இருவழி சாலையாக இருக்கிறது.
இனி இது 4 வழி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட உள்ளது. இந்த சாலை விரிவாக்கமானது, 5 தேசிய நெடுஞ்சாலைகள், 3 மாநில நெடுஞ்சாலைகள், மதுரை, ராமேசுவரம் ஆகிய 2 ரயில் நிலையங்கள், பாம்பன், ராமேசுவரம் ஆகிய 2 சிறு துறைமுகங்களை இணைப்பதாக இருக்கும். இதனால் இப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பாதியாக குறையும். சுற்றுலா, ஆன்மிகம், கலாசாரம் போன்றவை மேம்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
பிரதமர் மோடி ட்வீட்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கிடைத்த மகத்தான செய்தி என்று பிரதமர் மோடி ட்வீட் பதிவிட்டு இருந்தார். அவர் கூறுகையில், பரமக்குடி டூ ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கிடைத்த மகத்தான செய்தி. இது போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை அதிகரிக்க செய்யும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications