Tik Tok: டிக் டாக் செயலி மீதான தடை தொடரும்.. மத்திய அரசு திட்டவட்டம்
டெல்லி: டிக்டாக் செயலி மீண்டும் தொடங்கியதாக தகவல் வெளியாகிய நிலையில், இதன் மீதான பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா சீனா எல்லையில் இரு நாட்டு படைவீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ வீரர்கள் பலியாகினர். இதனால், இந்தியா, சீனா இடையேயான உறவு மிகவும் மோசமடைந்தது. இதனால், 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 59 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதில், டிக்டாக் செயலியும் ஒன்று. நாட்டின் பாதுகாப்பு, தகவல் திருட்டு போன்றவற்றை தடுக்கும் வகையில் இந்த செயலிக்குத் தடை விதிக்கப்பட்டது.

தற்போது யூடியூபில் இருக்கும் பல பிரபலங்கள் பலரும் டிக்டாக்கில் இருந்து வந்தவர்களே. நாட்டில் பல கோடி பேர் இந்த டிக்டாக் செயலியை பயன்படுத்தி, வருமானம் ஈட்டி வந்தனர். ஒரே இரவில் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டது, பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது டிக்டாக் செயலி மீண்டும் பன்பாட்டுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு எதிர்ப்பத் தெரிவித்து இந்திய பொருள்கள் மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. சீனாவுக்கும் வரிகளை விதித்துள்ளது. இந்நிலையில், டிரம்பின் இந்த வரி விதிப்பை சீனா எதிர்க்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீன வெளியுறவுத் துறை அமைச்சரும் இந்தியாவுக்கு வந்து வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடியும் எஸ்இஓ மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சீனா இடையே நல்ல உறவு நிலவும் நிலையில், இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலி பயன்பாட்டுக்கு வருகிறது என்று தகவல் வெளியாகியது.. ஆனால், இதுகுறித்து மத்திய அரசோ, சீனா தரப்பிலோ எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால், டிக்டாக் செயலி மீண்டும் வருவதாக சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள டிக்டாக் செயலியை மீண்டும் அனுமதிக்கப் போவதாக வந்த செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டிக்டாக் தளம் மீண்டும் செயல்படத் தொடங்கியதாக செய்திகள் பரவிய நிலையில் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications