சிம்கார்டு விற்பனைக்கு செக் .. இனி போலீஸே வரும்.. மத்திய அரசு மாஸ்டர் பிளான்
டெல்லி: 'சிம்கார்டு' விற்பனைகளில் நடக்கும் மோசடிகளை தடுக்க மொத்தமாக 'சிம்கார்டு' விற்பனை செய்வதை மத்திய அரசு தடை செய்துள்ளது.
இப்போது எல்லாம் செல்போன் தான் மோசடிகளின் பிறப்பிடமாக உள்ளது.நம்முடைய செல்போன்களை ஹேக் செய்யும் கும்பல், பல வகையில் மோசடி செய்ய நூதன முறையில் ஹேக்கிங் மெசேஜ்களை நம்பி ஏமாற்றுகிறார்கள்.

இன்னொரு பக்கம் மோசடி நபர்கள், முறைகேடான வழிகளில் 'சிம்கார்டு' வாங்கி பல்வேறு வகையில் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். போலியாக அடையாள அட்டை கொடுத்து சிம்கார்டு வாங்குவதை தவிர்த்தால் மட்டுமே ஆன்லைன் மோசடிகளை தடுக்க முடியும் என்பதால் அதிரடியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
சிம்கார்டு விற்பனை செய்பவர்கள் சிலர் மொத்தமாக சிம்களை விற்று மோசடிக்கு துணை போவதாக அரசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் மோசடிகளை தடுப்பதற்காக மொத்தமாக 'சிம்கார்டு' விற்பனை செய்வதை தடுத்து மத்திய அரசு நேற்று முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசும் போது, " நாடு முழுவதும் சிம்கார்டு விற்பனை செய்பவர்களின் விவரங்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். நாடு முழுவதும் 10 லட்சம் 'சிம்கார்டு' விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். சிம் கார்டு விற்பனை செய்பர்களின் விவரங்களை சரிபார்க்கும் வேலையை போலீசார் மூலம் செய்ய வேண்டும். போலீஸ் சரிபார்ப்பு பணிக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இனிமேல் மொத்தமாக 'சிம்கார்டு' விற்பனை செய்ய முடியாது. அதனை மத்திய அரசு தடை செய்துள்ளது. மோசடிகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். விதிமுறைகளை மீறும் 'சிம்கார்டு' விற்பனையாளர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

நாடு முழுவதும் இதுவரை விதிகளை மீறியதாக 52 லட்சம் செல்போன் இணைப்புகளை மத்திய அரசு துண்டித்துள்ளது. 67 ஆயிரம் 'சிம்கார்டு' விற்பனையாளர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடந்த மே மாதத்தில் இருந்து 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்-அப் மூலம் மோசடி செயல்களில் ஈடுபட்ட சுமார் 66 ஆயிரம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் முடக்கி உள்ளது. இனிமேல் வர்த்தக பணிக்காக தனியாக செல்போன் இணைப்பு வழங்கப்படும் இந்த திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். வர்த்தக நிறுவனங்களின் சுயவிவரங்களும், சிம்கார்டை ஒப்படைப்பவர்களின் சுயவிவரங்களும் சேகரிக்கப்படும்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications