யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடு.. போலி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கெட்கரை பணி நீக்கம் செய்தது மத்திய அரசு!
டெல்லி: இந்திய குடிமைப்பணி தேர்வில் முறைகேடு செய்ததாக, இளம் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கெட்கர் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. முறைகேடு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அனைத்தும் உண்மை என தெரிய வந்துள்ள நிலையில், அவரை மத்திய அரசு, ஐஏஎஸ் பணியிலிருந்து நீக்கம் செய்திருக்கிறது.
இந்தியாவில் மிக கடுமையான தேர்வாக கருதப்படுவது குடிமைப்பணிக்கான தேர்வுதான். இந்த தேர்வை எழுதுவதற்கு வயது வரம்பும், எத்தனை முறை தேர்வை எழுத வேண்டும் என்கிற கட்டுப்பாடும் இருக்கும். ஆனால், இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி, பல முறைகேடுகளை செய்து தேர்வில் வெற்றி பெற்றிருப்பதாக பூஜா கெட்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை செய்ய ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, இவரது தந்தை மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. இவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இது தனிக்கதை. ஆனால், தனது மகள் பூஜாவை எப்படியாவது ஐஏஎஸ் அதிகாரியாக ஆக்கிவிட வேண்டும் என்று குடும்பம் திட்டமிட்டிருக்கிறது.
முதற்கட்டமாக இரண்டு பெயர்கள் பூஜாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு பெயர்கள், இரண்டு அடையாள அட்டை, இரண்டு மெயில் ஐடி, இரண்டு முகவரி என எல்லாமே இரண்டாக ஒருவாக்கப்டப்டிருக்கிறது. ஆனால் ஆள் ஒன்றுதான். இந்த மோசடி மூலம் தேர்வு எழுதும் வாய்ப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் போதாது என்று இடஒதுக்கீடுக்கும் சில தில்லுமுல்லு வேலைகளையும் பார்க்கப்பட்டிருக்கிறது.
முதலாவதாக தன்னை ஒரு மாற்றுத்திறனாளி என்று பூஜா கூறிக்கொண்டார். அதாவது தனது இடது கால் மூட்டு பகுதியில் பாதிப்பு இருப்பதாகவும், இதனால் நடப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் கூறி சான்றிதழ்களை கொடுத்திருக்கிறார். இதில் டிவிஸ்டு என்னவெனில், இந்த பாதிப்பு வெறும் 7% தான். உடலில் 40%க்கும் மேல் பாதிப்பு இருந்தால் மட்டுமே ஒருவர் மாற்றுத்திறனாளியாக அறியப்படுவார் என்பது விதி. எனவே இதை மறைத்து தன்னை மாற்றுத்திறனாளி என்று கூறியுள்ளார்.
அதேபோல OBC சான்றிதழை கொடுத்திருக்கிறார். OBC எனில் அதற்கு வருமான உச்சவரம்பு இருக்கிறது. இந்த சமூகத்தை சேர்ந்தவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்தை தாண்டி இருக்க கூடாது. அப்படி இருந்தால்தான் இடஒதுக்கீட்டை பெற முடியும். இதிலும், வருமானத்தை குறைத்து காட்டி, இடஒதுக்கீடு மூலம் உள்ளே நுழைந்திருக்கிறார் பூஜா. இவை அனைத்தையும் பயன்படுத்தி குடிமைப்பணி தேர்வில் பாஸ் செய்து ஐஏஎஸ் அதிகாரியாக ஆகியுள்ளார். இதன் பின்னர் பயிற்சி கட்டத்தில் நுழைந்திருக்கிறார்.
எல்லாம் ஓகே ஆனாலும், குடிமைப்பணி தேர்வில் அவ்வளவு எளிதாக முறைகேடு செய்துவிட முடியாது. அதாவது மாற்றுத்திறனாளி என்று தங்களை சொல்லிக்கொள்ளும் ஐஏஎஸ் பயிற்சியாளர்களை, எய்ம்ஸ் மருத்துவக்குழு நேரடியாக பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும்.
இந்த பரிசோதனை கோவிட் காலத்தில் நடந்திருக்கிறது. இதற்காக பூஜாவுக்கு பலமுறை அழைப்பு வந்திருக்கிறது. இந்த அழைப்புகளை கோவிட் தொற்றை காரணம் காட்டி புறக்கணித்துள்ளார் அவர். இறுதியாக தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டை ஆதாரமாக சமர்பித்துள்ளார்.
எல்லாம் ஒருவழியாக முடிந்திருக்கிறது. இதன் பின்னர், பயிற்சி காலத்தில் தனக்கு தனி கார் வேண்டும் என்றும், தனி அறை வேண்டும் என்றும் கூறி, உதவி கலெக்டரின் அலுவலகத்தை ஆக்கிரமித்துக்கொண்டார். இந்த பஞ்சாயத்தின்போதுதான் பூஜா மீது சந்தேகம் வந்து, விஷயம் வெளியில் தெரிந்திருக்கிறது.
அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றது. விசாரணையில் ஏறத்தாழ அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என்று தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, பூஜா முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அனுகினார். நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து அவர் தற்போது தலைமறைவாக இருக்கிறார்.
இதனையடுத்து, பூஜா தற்போது ஐஏஎஸ் பணியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. என்னதான் மத்திய அரசு ஆக்ஷன் எடுத்திருந்தாலும், பணமும், அதிகாரமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஐஏஎஸ் ஆகிவிடலாமா? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications