மனைவியுடனான வலுக்கட்டாய பாலியல் உறவை 'ரேப்' என்று குற்றமாக்க மத்திய அரசு எதிர்ப்பு
டெல்லி: மனைவியின் விருப்பமின்றி கணவன் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டாலும் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடர முடியாது என்று முந்தைய இந்திய தண்டனை சட்டத்தில் இருந்தது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த பாரதீய நியாய சன்ஹிட் சட்டத்தின் 63-வது பிரிவிலும் இதே போல் இருக்கிறது. இந்நிலையில் வலுக்கட்டாய பாலியல் உறவை 'பலாத்காரம்' என்று குற்றமாக்கினால், அது திருமண வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
'மனைவியின் சம்மதமில்லாமல் கணவன் உடலுறவுகொள்வது குற்றமாக்கப்பட வேண்டும்' என்பது பெண்ணியச் செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில், மத்திய அரசோ, அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் மிக அதிகம் ஆகும். இதில் பல குற்றங்கள் வெளியுலகின் கவனத்துக்கே வராதவை ஆகும். குறிப்பாக இதில் குடும்பப் பாலியல் வல்லுறவுகளே மிக அதிகம் ஆகும்.

இந்தியாவில் இந்த குற்றங்களை நிகழ்த்துபவர்களில் பெரும்பாலும் கணவர்கள் ஆவார். இதில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் மனைவிகள் இருக்கிறார்கள். மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவர் உடலுறவுகொள்வது, 'மேரிட்டல் ரேப்' (Marital Rape) ஆகும். 'மேரிட்டல் ரேப்' கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
சிலர் மட்டுமே வெளியில் கூறியிருக்கிறார்கள். பெண் ஒருவர் கடந்த 2022ம் ஆண்டு அளித்த பேட்டியில், "என் முதலிரவில் பெரும் கொடுமையை அனுபவித்தேன். அவரிடம் பேசுவதற்கு முயன்றேன்... ஆனால், அன்றைய இரவு என் விருப்பம் இல்லாமல் மூர்க்கத்தனமாக ஏழு முறை வல்லுறவு செய்தார். காலையில் என்னால் படுக்கையிலிருந்து எழக்கூட முடியவில்லை... உடல் முழுக்க மரண வலி ஏற்பட்டதாக கதறினார். இப்படி பல கொடுமைகளை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள்
இந்திய தண்டனை சட்டப்படி, மனைவியின் விருப்பமின்றி கணவன் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டாலும் அவர் மீது பலாத்கார வழக்கு தொடர முடியாது . இதுதான் கணவன்கள், மனைவிக்கு செய்யும் கொடுமைக்கு நீதி பெற முடியாத நிலைக்கு காரணமாக உள்ளதாக பெண்ணிய ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அதேநேரம் அப்படி பலாத்கார வழக்கு தொடர அனுமதித்தால், கணவன்களை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தும் ஆயுதமாகிவிடும் என்றும், குடும்ப உறவுகளில் சிக்கலும் குழப்பமும் ஏற்படும் என்றும் மறுவாதம் வைக்கப்படுகிறது.
இதனிடையே இந்திய தண்டனை சட்டப்படி, மனைவியின் விருப்பமின்றி கணவன் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டாலும் அவர் மீது கற்பழிப்பு வழக்கு தொடர முடியாது என்ற பிரிவினை ரத்து செய்து விட்டு, வலுக்கட்டாய உறவை பலாத்கார குற்றமாக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுக்களுக்கு பதில் அளிக்குமாறு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதுதொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: "மனைவி 18 வயது நிறைவடைந்தவராக இருந்தால், அவரது விருப்பமின்றி அவருடன் கணவர் நடத்தும் பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் உறவு பலாத்காரம் ஆகாது" என்று பாரதீய நியாய சன்ஹிட் சட்டத்தின் 63-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. அந்த சட்டப்பிரிவு அப்படியே நீடிக்க வேண்டும். அதை விடுத்து, மனைவியுடனான வலுக்கட்டாய பாலியல் உறவை 'பலாத்காரம்' என்று குற்றமாக்கினால், அது திருமண வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். திருமணம் என்ற கட்டமைப்பில் கடுமையான குழப்பத்துக்கு வழிவகுக்கும்" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications