12 அதிநவீன சுகோய் போர் விமானங்களை வாங்க ஒப்புதல்! பாதுகாப்பு படையில் மேஜர் மாற்றம்! ஏன் முக்கியம்
டெல்லி: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்த 12 சுகோய் போர் விமானங்களை வாங்கப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், சுமார் ₹45,000 கோடி மதிப்பிலான ஒன்பது கொள்முதல் திட்டங்களுக்குப் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றாக இந்திய பாதுகாப்புப் படைகள் இருக்கிறது. பாதுகாப்புப் படைகளை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ச்சியாக புது ஆயுதங்களையும் கொள்முதல் செய்து வருகிறது.
அதன்படி இப்போது சுமார் ₹45,000 கோடி மதிப்பிலான ஒன்பது கொள்முதல் திட்டங்களுக்குப் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்த 12 சுகோய் 30 MKI போர் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 11,000 கோடி ரூபாய் மதிப்பில் விமானங்கள் மற்றும் அது சார்ந்த கிரவுண்டு திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் 60 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டில் தயாரிக்கப்பட பாகங்களைக் கொண்டிருக்கும் என்றும் ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்திய விமானப்படையின் அதி நவீன விமானமாக இந்த சுகோய் விமானம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், துருவஸ்த்ரா என்ற ஏவுகணைகளை வாங்குவது மற்றும் டோர்னியர் விமானங்களை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ₹45,000 கோடி மதிப்பிலான ஒன்பது கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கல்வான் மோதலுக்கு பிறகே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் அமைதியான ஒரு சூழல் இல்லை. அங்கே குவிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட போதிலும், இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. இந்தச் சூழலில் ஆயுதங்கள் மற்றும் விமானங்களைக் கொள்முதல் செய்யப் பாதுகாப்புத் துறை அளித்த ஒப்புதல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications