தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட இல்லை.. மாநில பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு தகவல்
டெல்லி: நடப்பாண்டில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறித்து கம்யூனிஸ்ட் எம்பிக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்துள்ளார். அதில் தமிழ்நாட்டிற்கு ரூ. 1260 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், அதில் ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பெஞ்சல் புயல் காரணமாகக் கனமழை பெய்தது. குறிப்பாகச் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

புயல் பாதிப்பு: இதனால் பல்வேறு பகுதிகளிலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களை மீட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணிகளும் நிவாரண பணிகளும் இப்போது நடந்து வருகிறது. சமீபத்தில் தான் புயலால் ஏற்பட்ட சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ.2000 கோடியை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
கேள்வி: இதற்கிடையே இன்று நாடாளுமன்றத்தில் நடப்பாண்டில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மாநிலம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தொடர்பாகக் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் சுப்பராயன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்தார்.

நாடாளுமன்றத்தில் தகவல்: அதிகபட்சமாக பாஜக ஆட்சியில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ. 3978 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதில் இரண்டு தவணையாக சுமார் 2984 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. செய்யப்பட்டுள்ளது. அடுத்து யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு மொத்தம் 2388 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதற்கு ஒரே தவணையாக ரூ. 1748 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு மாநிலங்களைத் தொடர்ந்து என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் உள்ள ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூ. 1380 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 1036 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மற்றொரு என்டிஏ கூட்டணிக் கட்சியான ஜேடியு ஆட்சி செய்யும் பீகாருக்கு ரூ. 1748 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் ரூ. 1310 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு நிதி இல்லை: மற்ற பல்வேறு மாநிலங்களிலும் நிதி விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாட்டிற்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து மொத்தம் ரூ. 1260 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை. அதேநேரம் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மட்டும் ரூ. 246 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படவில்லை
அண்டை மாநிலங்கள்: நமது அண்டை மாநிலமான கேரளாவுக்கு மொத்தம் 388 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் 290 கோடி ரூபாய் நிதி தரப்பட்டுள்ளது. அதேபோல மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கு 976 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அங்கு ரூ. 366 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிரத் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து சுமார் ரூ.3400 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications