அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறக்கலாம்... ஊரடங்கு 5-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு..!
டெல்லி: நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
அக்டோபர் 15 முதல் திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்களை திறக்கலாம் என மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது.
மேலும், பள்ளி கல்லூரிகளை திறப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5-ம் கட்ட அறிவிப்பு
கொரோனா ஊரடங்கு 5-ம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. அந்த அறிவிப்பில், அக்டோபர் 15-ம் தேதி முதல் தியேட்டர்களை 50 % இருக்கைகளுடன் திறந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவற்றை அக்டோபர் 15 முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் வணிக கண்காட்சிகளை அக்டோபர் 15-க்கு பிறகு நடத்திக்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.

தளர்வுகள் கிடையாது
இந்நிலையில் நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அக்டோபர் 31 வரை எவ்வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதேவேளையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் மாநிலம் விட்டு மாநிலம் சென்றுவர எந்த சிறப்பு அனுமதியும் பெறத் தேவையில்லை என்றும் ஒரு சில இடங்களுக்கு மட்டும் அங்குள்ள நிலைமையை பொறுத்து இ-பாஸ் தேவைப்படக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

மாநில அரசுகள்
பள்ளி கல்லூரிகள் திறப்பதை பொறுத்தவரை மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கூடுமானவரை ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் மாணவர்களின் வருகைப் பதிவு விவகாரத்தில் அவர்களுக்கு கல்வி நிலையங்கள் எந்த நிர்பந்தமும் கொடுக்கக்கூடாது என எச்சரித்துள்ளது. கல்லூரி பல்கலைக்கழகங்களில் உள்ள ஆய்வகங்களை ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்காக அக்டோபர் 15 முதல் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

100 பேருக்கு அனுமதி
அரசியல் கட்சி- கலாச்சாரம்- மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 100 பேருக்கு மட்டுமே ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதே நிலை மீண்டும் தொடரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே 65- வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 10 வயதுக்கு குறைந்த குழந்தைகள் வெளியிடங்களுக்கு செல்வதை சில காலத்திற்கு தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications