சூடான் விவகாரம்.. சித்தராமையா சொன்ன அந்த ஒரு வார்த்தை.. உடனே கொந்தளித்த ஜெய்சங்கர்! சுளீர் பதிலடி
டெல்லி: சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக சித்தராமையா மற்றும் ஜெய்சங்கர் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. சித்தராமையாவை ஜெய்சங்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நாடு சூடான்.. அங்கே இருந்த அதிபர் அல் பஷீர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும், அங்கே நடக்கும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கே உள்ள பல துணை ராணுவ குழுக்கள் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக அங்கே நடந்து வந்த ராணுவ தாக்குதல் அதிகரித்துள்ளது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதலுக்குக் காரணம் என்று மாறி மாறி குற்றஞ்சாட்டியும் வருகின்றனர்.

சித்தராமையா: இதனிடையே சூடானில் சிக்கித் தவிக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த 31 பழங்குடியினர் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா பேசியதை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்தார். கர்நாடகாவின் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மக்களை மீட்டெடுப்பதில் மத்திய அரசு செயலற்று இருப்பதாக சித்தராமையா விமர்சித்திருந்தார்.
அவர்கள் கடந்த சில நாட்களாக உணவின்றி தவித்து வருவதாகவும் இருப்பினும் அவர்களை மீட்க எந்தவொரு நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை என்றும் சித்தராமையா விமர்சித்திருந்தார்.
பதிலடி: இதற்குத் தான் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், "சிக்கியுள்ளவர்களின் நிலைமையை நீங்கள் அரசியலாக்குவது முற்றிலும் பொறுப்பற்றது. எந்த தேர்தல் வெற்றியும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை நியாயப்படுத்தாது. உங்கள் ட்வீட்டைக் கண்டு திகைத்துவிட்டேன்! உயிர்கள் ஆபத்தில் உள்ள நிலையில், அதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சூடானில் அரசு எடுத்து வரும் முயற்சிகளை விவரித்துள்ளார். அதேநேரம் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் விவரங்கள் மற்றும் இருப்பிடங்களைப் பகிரங்கப்படுத்த முடியாது என்றும் நடந்து கொண்டிருக்கும் கடுமையான சண்டையால் அவர்கள் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அவர்களைப் பாதுகாப்பாகக் கூட்டி வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
உதவி மையம்: முன்னதாக அங்குள்ளவர்களுக்கு உதவ மத்திய அரசு கட்டுப்பாட்டு மையம் ஒன்றை அமைத்துள்ளது. அங்கே உதவி தேவைப்படுவோர் மின்னஞ்சல் அல்லது மொபைல் மூலம் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.
சூடானில் உள்ள இந்தியர்கள் உதவி பெறத் தொலைப்பேசி: 1800 11 8797 (இலவச எண்) +91-11-23012113; +91-11-23014104; +91-11-23017905; மொபைல்: +91 9968291988 ஆகியோ மொபைல்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications