சென்னை அண்ணாசாலை ஸ்தம்பித்தது - ஏர்கலப்பையுடன் சாலையில் திரண்ட விவசாயிகள் கைது
தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் சக்கா ஜாம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். சென்னை அண்ணாசாலையில் ஏராளமான விவசாயிகள் திரண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடலூர், திருச்சி, ராஜபாளையம், விருதுநகரிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வழியுறுத்தி நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். தமிழகத்தில் சென்னை தொடங்கி விருதுநகர் வரை முக்கிய சாலைகளில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் சட்டை அணியாமல் கையில் ஏர்கலப்பையுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் காவல்துறையினர் காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில் மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் ஜவான் பவன் சிக்னல் அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சக்கா ஜாம்.. டெல்லியில் 50,000 போலீஸ் குவிப்பு.. பல மெட்ரோ ரயில்கள் மூடல்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.