கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எப்படி நிறைவேற்றி கொள்வது என்பது எங்களுக்கு தெரியும்- நாயுடு மிரட்டல்
Recommended Video
டெல்லி: கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பது எங்களுக்கு தெரியும் என சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால்தான் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து நாயுடு விலகினார்.
எனினும் சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேச எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க நாயுடு முடிவு செய்தார்.
அதன்படி டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் மரியாதை செலுத்தினார். பின்னர் ஆந்திர பவனில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆந்திர மக்களின் சுயமரியாதையை காப்பாற்றவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
ஆந்திர சுயமரியாதை மீது தாக்குதல் நடத்தினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பது எங்களுக்கு தெரியும். தனி மனிதனை தாக்கி பேசுவதை பிரதமரும் மத்திய அரசும் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார் சந்திரபாபு நாயுடு.