அகிலேஷை சந்தித்த கேசிஆர்.. விரைவில் சண்டிகர், பெங்களூர் விசிட்- பாஜகவுக்கு செக் வைக்க ‘பலே’ வியூகம்
டெல்லி: தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இன்று டெல்லியில் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்த மாநில கட்சிகளின் கூட்டணிக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு தர வேண்டும் என சந்திரசேகர் ராவ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், விரைவில் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எடுக்கவேண்டிய நிலைப்பாடு தொடர்பாகவும் இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரசேகர் ராவ்
தெலுங்கானா மாநில முதல்வரும், தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ், மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ஜ.க, காங்கிரஸுக்கு எதிராக வலிமையான மூன்றாவது அணியை உருவாக்க முயற்சித்து வருகிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மாநிலக் கட்சிகளை ஒன்றிணைப்பது அவரின் முக்கியத் திட்டமாக உள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று முக்கிய தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.

வலிமையான கூட்டணி
இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பலரை சந்தித்துள்ளார் சந்திரசேகர் ராவ்.
இந்நிலையில் இந்தியாவில் அதிகமான மக்களவை தொகுதிகளை கொண்டுள்ள உத்தர பிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சியையும் கூட்டணியில் இணைக்கும் முயற்சியாகவே அகிலேஷ் யாதவை இன்று சந்தித்துள்ளார் சந்திரசேகர் ராவ்.

மற்ற மாநிலங்களிலும்
விரைவில் சண்டிகர் சென்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரையும் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேச உள்ளார்.
மேலும், கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்று முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மகனும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறார் சந்திரசேகர் ராவ்.

காங்கிரஸுடன் மோதல்
சந்திர சேகர் ராவ் காங்கிரஸ் கட்சி இடம்பெறும் கூட்டணியை விரும்பவில்லை. காங்கிரஸும் அவரை கடுமையாக எதிர்த்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி அம்மாநிலத்திற்கு சமீபத்தில் சென்றார்.
அப்போது பேசிய ராகுல், சந்திரசேகர் ராவ் ஆட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் ஆட்சி செய்வதையே பாஜக விரும்புகிறது. சந்திரசேகர் ராவ் முறைகேடாக சொத்து குவித்தாலும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காது எனக் கடுமையாகச் சாடியிருந்தார்.

காங்கிரஸ் இல்லாத கூட்டணி
இதனால் சந்திரசேகர் ராவ் காங்கிரஸ் இல்லாத மாநில கட்சிகள் ஒன்றிணைந்த பிரமாண்ட கூட்டணியை அமைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறார். ஆனால், தி.மு.க, சிவ சேனா உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் இல்லாத கூட்டணியில் இணைய விரும்பவில்லை என்ற நிலை இருக்கிறது. இதனால், சந்திரசேகர் ராவின் பிரமாண்ட முயற்சி பலிக்குமா என அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்நிலையில்தான், நாட்டிலேயே அதிகமான மக்களவை தொகுதிகளை கொண்டுள்ள உத்தர பிரதேசத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை இன்று கேசிஆர் சந்தித்துள்ளது எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை தோற்கடிப்பது குறித்தும் அவர் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. மற்ற மாநில கட்சித் தலைவர்களிடம் அவர் இதுகுறித்து பேசி வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications