யாரும் இல்லாத திருச்சி கலெக்டர் ரூமுக்குள் யாருங்க இது? மதிய நேரத்தில் எல்லாரும் எங்கே போயிட்டாங்க?
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமான பாதுகாப்பு வளையத்திற்குள்தான் கலெக்டர் ஆபீஸ் உள்ளது.. ஆனால், அந்த மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ முகாம் அலுவலகத்திலேயே இப்படியொரு பகீர் சம்பவம் அரங்கேறி உள்ளது.. இந்த அத்துமீறல் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணையை திருச்சி போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள்.. அப்படி என்னதான் நடந்தது?
திருச்சி மிலட்டுகுறை, ராஜா காலனி அருகே அமைந்துள்ள கண்டோன்மென்ட் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதன் முக்கிய நிர்வாக மையங்கள் செயல்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதீக் தயாள் ஐஏஎஸ் பொறுப்பேற்று மாவட்டத்தின் முக்கிய நிர்வாகங்களை கவனித்து வருகிறார்.

திருச்சி கலெக்டர் ஆபீஸ்
ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில், கடந்த சில நாட்களாகவே தமிழக அரசின் பொதுப்பணித்துறை மூலமாக சில முக்கிய கட்டிட பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த புனரமைப்பு பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அப்படி வேலைக்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், இந்த காரியத்தை செய்துள்ளார்.
அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் இல்லாத மதிய நேரத்தில், திடீரென மாவட்ட ஆட்சியரின் பிரத்யேக அறைக்குள் துணிகரமாக நுழைந்துள்ளார் இந்த இளைஞர்.. அங்கு போடப்பட்டிருந்த மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ நாற்காலியில் உட்கார்ந்து, தன்னுடைய செல்போனில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
ஆட்சியர் அறை நாற்காலி
அரசாங்கத்தின் மிக முக்கிய ஆவணங்கள், ஃபைல்கள் வைக்கப்பட்டுள்ள, ஒரு மாவட்டத்தின் தலைமை நிர்வாகியின் ரூமுக்குள், சாதாரண தொழிலாளி ஒருவர் புகுந்து விளையாடிய அந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் அப்லோடு செய்யப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி ஒட்டுமொத்த அரசு வட்டாரங்களிலும், பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தீவிர விசாரணையை தொடங்கியது. பொதுப்பணித்துறை புனரமைப்பு பணியின் போதுதான் இந்த விதிமீறல் நடந்துள்ளது என்பதை அதிகாரிகள் முறைப்படி உறுதிப்படுத்தினார்கள்.
அரசு அலுவலக ஆவணங்கள்
மேலும், அரசு அலுவலகங்களின் ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு சவால் விடும் வகையில் அனுமதியின்றி வீடியோ பதிவு செய்து வெளியிட்டது மிகப்பெரிய விதிமீறலாக கருதப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்தீக் தயாள் உடனடியாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அனுமதியின்றி வீடியோ பதிவு செய்து அரசு விதிகளுக்கு முரணாக செயல்பட்ட அந்த வடமாநில தொழிலாளி மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தற்போது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், ஒரு வெளிமாநில தொழிலாளி இவ்வளவு எளிதாக உள்ளே நுழைந்து கலெக்டர் சேரிலேயே உட்கார்ந்து ரீல்ஸ் எடுத்த சம்பவம் திருச்சி பகுதியில் வாழும் பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கலெக்டர் அலுவலக ரூமில் யார் இவர்
இதனிடையே, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தங்களுக்குரிய பாதுகாப்பு நடைமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகள் தற்போது கடுமையான அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் வழங்கியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட வடமாநில இளைஞர் மீது என்ன மாதிரியான கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.. ஆனால் அரசு அலுவலகங்களின் பாதுகாப்பு குறைபாடுகளை இந்த சம்பவம் கேள்விக்குறியாக்க உள்ளது..!!












Click it and Unblock the Notifications