சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை அதிகாரிகளின் பட்டியல் எங்கே எனக் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், சென்னை அண்னா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும் எனக் கூறியது.
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள். இது தொடர்பாக பக்கத்து வீட்டு சிறுவன் மீது புகாரளிக்க, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்றனர். அப்போது,
காவல்துறை இன்ஸ்பெக்டர் தங்களை தாக்கியதாகவும், சிறுவனின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்த விவகாரம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டனர். எனவே இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சூர்யகாந்த், உஜ்ஜல் புயல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை தமிழர் அல்லாத தமிழ்நாட்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் விசாரிக்க வேண்டும் எனவும் அவர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
அதன்படி, அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை அதிகாரிகளின் பட்டியல் எங்கே எனக் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், சென்னை அண்னா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும் எனக் கூறியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கூறியதாவது: -
சிபிஐயிடம் வழக்கை ஒப்படைத்தால் 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் எனவே, காவல்துறையின் சிறந்த அதிகாரிகள், மூத்த அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்தலாம். சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். சிறப்புக் குழுவின் விசாரணை அறிக்கையை ஐகோர்ட் தலைமை நீதிபதி முன்பு சமர்பிக்க வேண்டும்.
அறிக்கை அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கை விசாரிக்க உரிய அமர்வை ஏற்படுத்த வேண்டும். விசாரிக்க அமைக்கப்படும் அமர்வு முன்பு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையை வாரம் ஒருமுறை அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது. மேலும், வழக்கு செலவுக்காக ரூ.50 ஆயிரம், இதர செலவுகளுக்காக ரூ.25 ஆயிரம் சிறுமியின் தாய்க்கு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications