சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர்நீதிமன்ற கருத்துகளுக்கு தடை! உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், சென்னை காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியிருந்தது. இந்நிலையில், காவல் ஆணையருக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்திருக்கிறது.
கடந்த டிச.28ம் தேதி இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி, "எஃப்ஐஆரை போலீஸார் கசியவிடவில்லை" என போலீஸ் தரப்பாக வாதாடினார். இதனை குறிக்கிட்டு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "சிட்டிசன் போர்ட்டலில் இருந்து 14 பேர் பார்த்தார்கள். அவர்களிடம் விசாரிக்கிறோம் என சொல்கிறீர்களே! எஃப்ஐஆர் கசியாமலா விசாரிப்பதாக சொல்கிறீர்கள்" என கேள்வி எழுப்பினர்.

மறுபுறம் அண்ணா பல்கலைக்கழக தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன், "துரதிருஷ்டவசமான இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. 189 ஏக்கர் பரப்பில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்கு 8 வழிகள் உள்ளன. அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 988 கேமராக்கள் உள்ளன. 849 செயல்படுகின்றன. மற்றவை செயல்படவில்லை. மாதந்தோறும் கேமராக்கள் செயல்படுகிறதா என பரிசோதனை செய்யப்படுகிறது. சம்பவத்துக்கு பின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. போலீஸ் விசாரணைக்கு அண்ணா பல்கலை முழு ஒத்துழைப்பு வழங்குகிறது" என்று கூறியிருந்தார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், "மாணவி அண்ணா பல்கலையில் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்றனர். பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ 25 லட்சம் வழங்க வேண்டும். கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணங்களையும் அவரிடம் வசூலிக்கக் கூடாது.
மாணவியின் பெற்றோருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். மாணவியின் அடையாளத்தை எஃப்ஐஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. முதல் தகவல் அறிக்கையில் உள்ள வார்த்தைகளும் கண்ணியத்துடன் இருக்க வேண்டும்.
எஃப்ஐஆரில் மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. சென்னை காவல் துறை ஆணையர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எஃப்ஐஆர் வெளியாவது புகாரளித்தவரின் சுதந்திரத்தை பறிக்கும். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்த மாணவி படிப்பை தொடர அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதில், மாணவி பல்கலைக்கழகத்திலேயே பயில்வார் என்று பல்கலைக்கழகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. மறுபுறம், காவல்துறை குறித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அனுகியிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள், பி.வி.நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இதில் நீதிபதிகள் சில உத்தரவை பிறப்பித்துள்ளனர். குறிப்பாக, சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு தடை விதித்துள்ளனர்.
மட்டுமல்லாது மாணவியின் எஃப்ஐஆர் எவ்வளவு நேரம் நீதிமன்றத்தில் இருந்தது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த கசிவை செய்தவர்களிடமிருந்து ரூ.25 லட்சம் இழப்பீட்டை பெற்று மாணவிக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications