காங்கிரஸ் சறுக்கிய இடத்தில் ஸ்கோர் செய்த பாஜக.. சத்தீஷ்கரில் தோல்விக்கு இதுதான் காரணமா?
ராய்ப்பூர்: சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்ற கனவில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் முடிவு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சத்தீஷ்கரில் காங்கிரஸ் கோட்டை விட்டது எங்கே என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம்.
சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறின.

ஆனால், தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. சத்தீஷ்கரில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அக்கட்சிக்கு ஆதரவு இல்லாதது என்பதே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயம் அடைந்தனர். காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு ஆளும் அரசு மீது பழங்குடியின மக்கள் கோபம் ஏற்படுவதற்கு ஒருகாரணமாக அமைந்தது. அதேபோல், மலப்பகுதிகளில் கிடைக்க கூடிய பொருள்களின் விலை வீழ்ச்சி அடைந்ததும் பழங்குடியின மக்கள் கோபம் அடைவதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இதனால் பழங்குடியின மக்கள் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில் கடந்த முறை 15 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது. ஆனால் இந்த முறை இது அப்படியே 54 ஆக அதிகரித்தது. பாஜக சத்தீஷ்கரில் ஆட்சியை பிடிக்க பழங்குடியின மக்களின் வாக்குகள் பெரிதும் கை கொடுத்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications