“INDIA கூட்டணி பலவீனமாக இருக்கிறது.. பாஜகவை போல வலிமையான கட்சியை நான் பார்த்ததில்லை” - ப.சிதம்பரம்
டெல்லி: பாஜகவை போன்ற வலிமையான கட்சியை நான் பார்க்கவில்லை என்று கூறியுள்ள ப.சிதம்பரம், இந்தியா(INDIA) கூட்டணி எதிர்பார்க்கும் அளவுக்கு பலமாக இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரே இப்படி பேசியிருப்பது சர்வதேச அளவில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

டெல்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் மையத்தில் சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் யாதவ் எழுதிய புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புத்தகத்தை வெளியிட்டு பேசியபோது சிதம்பரம் இவ்வாறு கூறியிருக்கிறார். "நீங்கள் சொல்வதை போல இந்தியா கூட்டணியின் எதிர்காலம் அவ்வளவு பிரகாசமானதாக இல்லை. மிருதுஞ்சய் சிங் யாதவுக்கு இந்தியா கூட்டணி இன்னும் அப்படியே இருப்பதாக அவர் நினைப்பதாகத் தெரிகிறது. எனக்கு அப்படி தெரியவில்லை.
இந்தியா கூட்டணி முழுமையாக அப்படியே உடையாமல் இருந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். ஆனால் அது பலவீனமாகத் தெரிகிறது. இந்த பலவீனத்தை சரி செய்து, கூட்டணியை இன்னும் வலுவாக்க முடியும். அதற்கான போதிய நேரம் இருக்கிறது.
எனது அனுபவத்திலும், வரலாற்று படிப்பினையிலும் சொல்கிறேன். பாஜகவைப் போல வலிமையான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சி வேறு எதுவும் இருந்ததில்லை. ஒவ்வொரு துறையிலும் அது வலிமையானதாக இருக்கிறது. பாஜகவை அரசியல் கட்சி என்பதை விட ஒரு இயந்திரம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். பாஜக ஒரு இயந்திரம். அதை பின்னாலிருந்து வேறு ஒரு இயந்திரம் இயக்குகிறது. இரண்டு இயந்திரங்களும் சேர்ந்து, தேர்தல் ஆணையம் முதல் நாட்டின் கடைகோடியில் உள்ள காவல் நிலையம் வரை அனைத்து இயந்திரங்களையும் கட்டுப்படுத்துகின்றன.
இதை எதிர்த்துதான் இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி போராடுகிறது. வலிமையான இயந்திரத்தை அனைத்து முனைகளிலிருந்தும் நாம் எதிர்கொள்ள வேண்டும்.
இந்த புத்தகத்திலிருந்து நான் பெறும் செய்தி ஒன்றுதான். ஒன்று 2029 நாடாளுமன்ற தேர்தலில் நாம் வலுவான ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும். அல்லது நாம் சரி செய்ய முடியாத இடத்திற்கு சென்றுவிடுவோம். அந்த வகையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமானதாகும்" என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கடந்த 3 பொதுத்தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. தேர்தலை எதிர்கொள்ளும் யுக்தியில் மாற்றம், புதிய தலைவர்கள், தலைமையில் மாற்றம் என என்னென்னவோ செய்து பார்த்தும் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இப்படி இருக்கையில் ப.சிதம்பரத்தின் பேச்சு புதிய கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications