வாக்கு திருட்டில் ஈடுபடுவோரை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்.. ராகுல் காந்தி கடும் ‛அட்டாக்’
டெல்லி: ‛‛வாக்கு திருட்டில் ஈடுபடுவோரை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார். வாக்கு திருட்டு மூலம் இந்திய ஜனநாயகம் அழிக்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர்'' என ராகுல் காந்தி மீண்டும் பரபரப்பான குற்றச்சாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 7 ம் தேதி டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது லோக்சபா தேர்தல், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்களில் பாஜக வாக்குகளை திருடியதாகவும், அதற்க தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது பெரும் விவாதத்தை கிளப்பியது. அதன்பிறகு பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து ராகுல் காந்தி பேரணி மேற்கொண்டார். செப்டம்பர் 1ம் தேதி அந்த பேரணி முடிவடைந்தது.
அன்றைய தினம் ராகுல் காந்தி கூறுகையில், காங்கிரஸ் கட்சி விரைவில் வாக்கு திருட்டு குறித்த புதிய ஹைட்ரஜன் குண்டை போடும். அதன்பிறகு பிரதமர் மோடியால் நாட்டு மக்களிடம் முகத்தை கூட காண்பிக்க முடியாது என்று கூறியிருந்தார். இதற்கிடையே தான் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்திப்பதாக காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.
இருப்பினும் எந்த விவகாரம் பற்றி ராகுல் காந்தி பேசப்போகிறார் என்பதை காங்கிரஸ் கட்சி தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தான் டெல்லி இந்திரா பவன் ஆடிட்டோரியத்தில் இன்று காலை ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வாக்கு திருட்டில் ஈடுபடுவோரை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார். இந்த குற்றச்சாட்டு நான் சாதாரணமாக கூறவில்லை. எதிர்க்கட்சி தலைவராக கூறுகிறேன். உரிய ஆதாரங்களுடன் சொல்கிறேன். வாக்கு திருட்டு மூலம் இந்திய ஜனநாயகம் அழிக்கப்படுகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர்.தேர்தலுக்கும் முன்பும், பின்புறம் யாரோ சிலர் நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதை திட்டமாக வைத்துள்ளனர்.
2023 கர்நாடகா சட்டசபை தேர்தல் சமயத்தில் ஆலந்த் தொகுதியில் ஒருவர் 6,018 வாக்குகளை நீக்க முயன்றார். 2023 தேர்தலில் ஆலந்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை எங்களுக்குத் தெரியாது. அவை 6,018 ஐ விட மிக அதிகம். ஆனால் ஒருவர் 6,018 வாக்குகளை நீக்கும்போது சிக்கினார், அது தற்செயலாகக் கண்டறியப்பட்டது.
பெண் ஒருவர் தனது குடும்பத்தை சேர்ந்தவரின் ஓட்டை பக்கத்து வீட்டுக்காரரால் நீக்கப்பட்டதை அறிந்தார். அவரிடம் கேட்டபோது அவர் மறுத்தார். இதனால் அந்த நபரின் ஓட்டு எப்படி டெலிட் செய்யப்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை. சில சக்திகள் ஓட்டுகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன’’ என்று குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications