தாமதாகும் அறிவிப்பு.. ஆம்ஆத்மி எப்போது தேசிய கட்சியாகும்? தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய பதில்! என்ன?
டெல்லி: ஆம்ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்துக்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் ஆம்ஆத்மி தேசிய கட்சி என்ற பெயரை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஆம்ஆத்மி தேசிய கட்சி அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்ற கேள்விக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளன. இந்த அரசியல் கட்சிகள் தேசிய கட்சிகளாகவும், மாநில கட்சிகளாகவும் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் மொத்தம் 8 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சிகளாக உள்ளன. மற்றவை அனைத்தும் மாநில கட்சிகளாகவே இருக்கின்றன.
அதன்படி பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள், தேசிய மக்கள் கட்சி மட்டுமே தேசிய கட்சிகளாக உள்ளன.

தேசிய கட்சிக்கான தகுதிகள் என்னென்ன?
இந்தியாவில் தேசிய கட்சி அந்தஸ்து பெற 2 விதிகள் உள்ளன. அதாவது மொத்த லோக்சபா இடங்களில் 2 சதவீதம் என்ற வகையில் 11 எம்பிக்களை 3 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து ஒரு கட்சி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் 4 மாநிலங்களில் 6 சதவீத ஓட்டு சதவீதத்துடன் தலா 2 எம்எல்ஏக்கள் பெற்றிருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றை ஒரு கட்சி பூர்த்தி செய்தால் தேசிய கட்சி எனும் அந்தஸ்து இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும்.

தேசிய கட்சியாகும் ஆம்ஆத்மி
இந்நிலையில் தான் தேசிய கட்சி அந்தஸ்து பெற அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி தகுதி பெற்றுள்ளது. இந்த தகுதியை அந்த கட்சி கடந்த ஆண்டு இறுதியில் நடந்த குஜராத் தேர்தலில் பெற்றது. அதாவது ஆம்ஆத்மி கட்சி தற்போது டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ளது. மேலும் கோவாவில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் 2 எம்எல்ஏக்களுடன் 6.8 சதவீதத்துக்கும் அதிகான ஓட்டுகளை பெற்றது. அதேபோல் குஜராத் தேர்தலில் 5 இடங்களில் வென்ற ஆம்ஆத்மி கட்சி 12.89 சதவீத ஓட்டுகளை பெற்றது. இதன்மூலம் ஆம்ஆத்மி கட்சி தேசிய கட்சி அந்தஸ்துக்கு தகுதியானதாக மாறியது.

தலைமை தேர்தல் ஆணையரிடம் கேள்வி
இருப்பினும் கூட ஆம்ஆத்மி கட்சியை இன்னும் கூட இந்திய தேர்தல் ஆணையம் தேசிய கட்சியாக அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஆம்ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்து எப்போது வழங்கப்படும்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

ராஜீவ் குமார் பதில்
இந்த கேள்விக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பதிலளித்தார். இதுபற்றி அவர், ‛‛ஆம்ஆத்மிக்கு தேசிய கட்சி எனும் அந்தஸ்து வழங்குவதற்கான பரிசீலனைகள் நடந்து வருகிறது'' என்றார். இதன்மூலம் ஆம்ஆத்மி விரைவில் தேசிய கட்சி அந்தஸ்து பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications